
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போதும் பதற்றம் இருக்கிறது. அங்குக் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்தாலும் இயல்பு நிலை முழுமையாகத் திரும்பவில்லை. இதற்கிடையே அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானை நோக்கிச் சென்ற கப்பலை ஈரான் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. ஈரானின் இந்த திடீர் நடவடிக்கை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது. இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதனால் அந்த நாடுகளைத் தாண்டியும் பாதிப்புகள் சர்வதேச அளவில் ஏற்படுகிறது. குறிப்பாக இப்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் குறிப்பிட்ட நாடுகளின் கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பாகிஸ்தான்
இதற்கிடையே பாகிஸ்தான் நோக்கிச் சென்ற ஒரு சரக்கு கப்பலை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் படைகள் தடுத்து நிறுத்தின. ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்குச் சென்ற ‘செலன்’ கப்பல் தான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உரியப் போக்குவரத்து அனுமதி இல்லாததால், நீர் வழிப்பாதையின் நுழைவாயிலில் இந்த கப்பல் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேலுடனான போருக்கு நடுவே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகம் இந்த வழியாகத் தான் நடக்கிறது. இந்தச் சூழலில் தான் ஹலசந்தியை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது. அங்கு வரும் கப்பல்கள் மீதான தாக்குதல்களால், பெரும்பாலான எண்ணெய் டேங்கர் போக்குவரத்தும் நின்று போய் இருக்கிறது. இது தொடர்பாகச் சர்வதேச நாடுகள் அறிக்கை விட்டன. அங்கு வழக்கமான போக்குவரத்து திரும்ப உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
பின்னணி
இதையடுத்து கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ஈரான் அனுமதி அளித்தது. இருப்பினும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதைத் தாண்டி மற்ற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பான அனுமதி உண்டு என ஈரான் கூறுகிறது. அதன்படி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸை கடந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் கடற்படைத் தளபதி அலிஜா தாங்ஸிரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “சட்ட விதிமுறைகளையும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதியையும் பின்பற்றாததாலேயே, ‘செலன்’ கப்பலை ஈரான் கடற்படை திருப்பி அனுப்பியது.. இந்த நீர் வழிப்பாதையின் வழியாக எந்தக் கப்பல் செல்வதற்கும் ஈரானின் அதிகாரிகளுடன் முழு ஒருங்கிணைப்பு அவசியம். ஈரான் மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் எடுத்த அதிரடி முடிவு
வரும் காலங்களில் ஹார்முஸ் ஜலசந்தியை தாங்களே நிர்வகிக்கப் போவதாகவும் ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைத் தவிரப் பிற நாடுகளின் கப்பல்கள் முன்கூட்டியே ஈரான் அதிகாரிகளிடம் சொல்லி ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சுங்க கட்டணம் செலுத்திப் பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் என ஈரான் கூறியுள்ளது. அதேநேரம் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்நீர் வழிப்பாதையைக் கடக்கத் தடை விதிக்கப்படும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது.
பாகிஸ்தான் முயற்சி
தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வர, மத்தியஸ்தராகத் தன்னை நிலைநிறுத்தப் பாகிஸ்தான் முயல்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த உதவ ரெடி எனப் பாகிஸ்தான் கூறுகிறது. இருப்பினும், இதுவரை பேச்சுவார்த்தை அழைப்புகளை ஈரான் நிராகரித்தே வந்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தானால் ஈரானைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர முடிந்தால் அது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். 1972இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் சீனாவுக்குச் சென்றதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. அதன் பிறகு இதுபோல செய்வது இதுவே முதல்முறையாகும்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் பாகிஸ்தான் நேரடியாகவே பயனடையும். ஈரானில் நீடிக்கும் போர் பாகிஸ்தானில் மிகக் கடுமையான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் எப்படியாவது இந்த மோதலை நிறுத்த வேண்டும் என விரும்புகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-blocks-pakistan-ship-in-strait-of-hormuz-no-permission-irgc-enforces-strict-transit-rules-784325.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
