
Business
oi-Prasanna Venkatesh
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்த நிலையில், இறுதியில் தோல்வியில் முடிந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்த முக்கிய பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ், அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானில் இருந்து திரும்புவதாக அறிவித்தார்.
இந்தத் தகவல் சர்வதேச முதலீட்டு சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கும் போது கச்சா எண்ணெய் விலை கூர்மையாக உயரவும், பங்குகள் வீழ்ச்சியடையும், தங்கம் விலை சரியும், அரசு பத்திரங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பேச்சுவார்த்தை ஏன் தோல்வியடைந்தது?
அமெரிக்கத் தரப்பு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதற்கு உறுதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் ஈரான் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ஜேடி வான்ஸ் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் எங்கள் இறுதி மற்றும் சிறந்த சலுகையை வைத்துள்ளோம். ஈரான் அதை ஏற்கிறதா என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இது ஈரானுக்கு மிகப்பெரிய பேட் நியூஸ், அமெரிக்காவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை அல்ல” என்றும் கூறினார். ஈரான் ஊடகங்கள், அமெரிக்காவுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளன. இது 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தரப்பின் விளக்கம்
ஈரான் அரசு தொலைக்காட்சி, அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா போரில் பெற முடியாததை பேச்சுவார்த்தையில் பெற முயன்றது என்று கூறியது.
குறிப்பாக, ஈரான் வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியம் (enriched uranium) அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டது. மேலும் உலகளவில் முக்கியமான எண்ணெய் கடல்பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறந்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணைக்கு மீது ஈரானுக்கு இருக்கும் sovereignty அதாவது உரிமையை அங்கீகரிக்கவில்லை.
இந்தக் கோரிக்கைகளை வைத்தது என்றும் ஈரான் தெரிவித்தது. “ஈரான் தன் தேசிய நலன்களை பாதுகாக்க ராணுவ வழியில் செயல்பட முடிவு செய்துள்ளது” என்று ஈரான் தரப்பு அறிவித்துள்ளது.
நாளை சந்தைக்கு என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அமைதி உடன்பாடு எதிர்பார்ப்பில் நாஸ்டாக் 100 குறியீடு 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருந்தது. ஆனால் இப்போது இது மோசமான சூழ்நிலையாக மாறியுள்ளது.
நாளை ஆசிய சந்தை துவங்கும் போது கச்சா எண்ணெய் விலை கூர்மையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. பிட்காயின் விலையும் இப்போதே 71000 டாலருக்கு குறைய துவங்கியுள்ளது.
மீண்டும் போர் தொடர்ந்தால் தாக்குதலும், பாதிப்புகளும் மிகவும் மோசமாக இருக்கும் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்திருந்தார். இதேபோல் ஈரானும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்கும் காரணத்தாலேயே ஈரான் அரசு ஊடகத்தில் ‘இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல விருப்பம் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்தக்கட்ட தாக்குதல் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏற்கனவே சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர். இதன் படி ஈரான் போர் அடுத்த 2-4 வாரம் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 200 டாலருக்கு செல்லும், தங்கம் விலை 12500 ரூபாய் வரையில் குறையும் என கணித்துள்ளனர். இதற்கு மத்தியில் பங்குச்சந்தை நிலைமை மோசமாகும். டாலர் உயரும், ரூபாய் சரியும்.
ஆனா ஒரு விஷயம்
2 வார போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் போது, அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை, ஆலோசனையில் இறங்குமா என்பது தான் அடுத்த முக்கியமான கேள்வி. இதேபோல் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா தலைமையில் இஸ்ரேல், லெபனான் தலைமையில் முக்கிய போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்விரண்டுக்கும் மத்தியில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இப்போர் நிறுத்த காலக்கட்டத்திற்குள் தாக்குதலை துவங்கினால் முதலீட்டு சந்தை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தாக்குதல் இல்லாத பட்சத்தில் மந்தநிலையில் தொடரும்.
டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?
இப்போது முக்கிய கேள்வி, அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று சந்தை வட்டாரங்கள் கருதுகின்றனர். அவர் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சந்தையை உறுதிப்படுத்தலாம் அல்லது ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அதிகரிக்கலாம்.
இந்த 24 மணி நேரம் சந்தைக்கு மிக முக்கியமானதாக இருக்கும். பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அமைதி உடன்பாடு தோல்வியடைந்தாலும், எதிர்காலத்தில் பேச்சு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதால் (ஜேடி வேன்ஸ் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் அதை ஏற்கிறதா என்பதைப் பார்ப்போம்- என தெரிவித்துள்ளார்) நீண்டகால பயம் தேவையில்லை என்ற நம்பிக்கையும் சந்தையில் நிலவுகிறது.
இவை அனைத்தும் அமெரிக்கா – இஸ்ரேல் கையில் தான் உள்ளது, ஈரான் மீது ஒரு தாக்குதல் நடத்தினாலும் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/us-iran-peace-talks-failed-oil-prices-set-to-surge-stocks-bitcoin-to-fall-as-jd-vance-leaves-pak-789233.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



