
International
oi-Vignesh Selvaraj
டெல்லி: ஓமன் நாட்டின் சோஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஈரான் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் 10 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி, ஓமன், பஹ்ரைன் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. ஓமனில் உள்ள சோஹர் மாகாணத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்குள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றிய இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சோஹர் மாகாணத்தில் உள்ள அல்-அவாஹி தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இதில் அங்கு பணியில் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாக ஓமன் அரசுச் செய்தி நிறுவனம் முதலில் தெரிவித்தது. பின்னர், உயிரிழந்த இருவரும் இந்தியர்கள் என்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா இடையே நடந்து வரும் இந்த மோதலில், ஈரானில் மட்டும் இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லெபனானில் மட்டும் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்கக் கூட்டத்தின்போது பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசிம் மகாஜன், “ஓமனில் நடந்த தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காயமடைந்த 10 இந்தியர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 5 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை. எங்கள் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
அதேபோல, ஈராக்கில் பாஸ்ரா அருகே மார்ச் 9 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான சஃபேசியா விஷ்ணு கப்பலில் இருந்த 15 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்போது பாஸ்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலில் இறந்த இந்தியரின் உடலை கொண்டு வருவதற்கும், மீட்கப்பட்ட 15 மாலுமிகளை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எங்கள் குழு பாஸ்ராவில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/2-indians-killed-10-injured-in-drone-attack-in-sohar-oman-by-iran-781143.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
