
International
oi-Rajkumar R
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் உள்ள நட்பு குறித்து ஈரான் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்தியா எங்களுக்கு உதவி செய்து வருகிறது என்றும் நாங்களும் இந்தியாவுக்கு உதவுவோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதை அடுத்து மத்திய கிழக்கில் போர் நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக உலகின் முக்கியமான கடல் பாதையாக இருக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அதிக அளவில் கடத்தப்படுகிறது. போர் சூழ்நிலை காரணமாக இந்த கடல் பாதையில் ஈரான் ராணுவம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – ஈரான் ஆலோசனை
இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலைமையைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் , ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராகி உடன் தொலைபேசியில் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் சில ஊடகங்கள் இந்த விவகாரத்தில் ஈரான் அரசு எந்த அதிகாரப்பூர்வ உத்தரவாதமும் வழங்கவில்லை என்று செய்தி வெளியிட்டன.
ஈரான் தூதரின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஈரான் தூதர் முகமது பதாலி, இந்தியா மற்றும் ஈரான் இடையே நீண்ட கால நட்பு உறவு இருப்பதாக கூறினார். “எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் விரைவில் பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். மேலும், தற்போது நடைபெறும் போரால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் இந்தியா உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஈரான் நிச்சயம் உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கொடியுடன் 28 கப்பல்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சுமார் 750க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் மொத்தமாக சுமார் 23,000 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களுடன் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
இந்தியர்கள் உயிரிழப்பு
இதற்கிடையில் ஓமான் நாட்டின் சோஹர் பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். பிஹாரைச் சேர்ந்த தேவநாதன் பிரசாத் சிங் என்ற 50 வயது இந்தியர் அமெரிக்க எண்ணெய் கப்பலில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ட்ரோன் படகு தாக்குதலில் அந்த கப்பலில் தீப்பற்றியதால் அவர் கடுமையாக காயமடைந்தார். பின்னர் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-calls-india-close-friend-amid-rising-middle-east-war-tensions-781217.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
