
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், அதற்கு ஈரான் நக்கலாக பதிலடி தொடுத்துள்ளது. சர்வதேச அளவில் முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், அதைத் திறப்பதற்கான சாவிகளை ‘காணவில்லை’ என்று நக்கலாக கூறியுள்ளது.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய மோதல் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஒரு பக்கம் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் கூட தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் சூழலில் நிலைமை மோசமாகவே இருந்து வருகிறது.

டிரம்ப்
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது ஹார்முஸ் சலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என மிரட்டியிருந்தார். இதற்காக அவர் 10 நாட்கள் வரை டைம் கொடுத்திருந்தார். இதற்கிடையே நேற்றைய தினம் ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்தார்.
இரண்டு நாட்களில் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஹார்முஸை திறக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நரகமே ஈரான் மீது இறங்கும் என்றும் அவர் எச்சரித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “போரை நிறுத்த டீல் போடவும் ஹார்முஸை திறக்கவும் ஈரானுக்கு கொடுத்திருந்த டைம் முடியப் போகிறது. அவர்கள் மீது முழுமையான நரகம் இறங்கும்!” என்று அவர் எச்சரித்திருந்தது.
நக்கல்
இதற்கிடையே ஈரான் நாட்டின் தூதரகங்கள் அமெரிக்காவுக்கு நக்கலாக பதிலடியைக் கொடுத்து வருகிறது. முதலில் ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம், “சாவிகள் காணாமல் போய்விட்டன” என்று கிண்டலாகப் பதிவிட்டு இருந்தது. அதற்குத் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம், “ஷ்ஷ்… சாவி பூந்தொட்டி அடியில் இருக்கிறது. நண்பர்களுக்கு மட்டும் திறக்கலாம்” என்று நக்கலடித்து இருந்தது.. ட்ரம்ப் மிரட்டலுக்கு ஈரான் இதுபோல பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பின்னணி
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது கூட்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இதனால் விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்துள்ளதுடன், இது உலகப் போராக மாறுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியின் மையத்தில் ஹார்முஸ் நீரிணை உள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இதன் வழியாகவே செல்கிறது. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகும்.
ஹார்முஸ்
போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளது. இதனால் டேங்கர் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கே ஈரான் இதுபோல செய்கிறது. இப்போது இந்தியா, சீனா உட்பட நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. மற்ற கப்பல்கள் வந்தால் அதன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும், வளைகுடாவில் உள்ள மற்ற நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றமே நிலவி வருகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-mocks-trump-we-ve-lost-the-keys-reply-to-us-president-amid-strait-of-hormuz-closure-standoff-787559.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
