
International
oi-Prasanna Venkatesh
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக அமெரிக்க கடற்படை கப்பலை கொண்டு மூடவும், ஈரான் கப்பலுக்கும், ஈரான் கச்சா எண்ணெய்க்கும் மொத்தமாக முடிவுகட்டப் போவதாக டிரம்ப் கூறினார். டிரம்ப்-ன் அறிவிப்பால் கடந்த வாரம் பெரும் சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து தற்போது ஒரு பேரல் 104 -107 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சந்தையும் பீதியில் இருந்த நிலையில், திங்கள்கிழமை ஈரான் தொடர்புடைய இரண்டு கச்சா எண்ணெய் டேங்கர்கள் வளைகுடா பகுதியில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நேக்கா வெளியேறியுள்ளன. அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை முடக்கும் திட்டம் தொடங்கும் முன்பே இது நடந்துள்ளது.

Kpler மற்றும் LSEG ஆகிய சர்வதேச கப்பல் தரவு நிறுவனங்களின் தகவல்களின்படி இந்த 2 கப்பல் பாதுகாப்பாக எவ்விதமான பிரச்சனையும், எதிர்ப்பும் இல்லாமல் ஹார்முஸ் வாயிலாக வெளியேறியுள்ளது என தெரிவித்துள்ளது.
ஒரு டேங்கர் ஆரோரா என்ற பெயருடன் ஈரான் எண்ணெய் பொருட்களை ஏற்றிய நிலையில் வெளியேறியது. மற்றொரு டேங்கர் நியூ ஃப்யூச்சர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து டீசல் ஏற்றியுள்ளது. இந்த இரண்டு டேங்கர்களும் அமெரிக்காவின் முடக்கத்துக்கு முன்பாக பாதுகாப்பான முறையில் வெளியேறியுள்ளது.
ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிய Felicity மற்றும் Jaya என்ற இரண்டு சூப்பர் டாங்கர் கப்பல்கள் இந்திய கடற்கரைக்கு வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் துவங்கியதில் இருந்து இதுவரையில் 23 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் வழித்தடத்தை கடந்துள்ளது. இதில் 16 கப்பல்கள் ஈரானின் கச்சா எண்ணெய் தொடர்புடையது. ஒவ்வொரு நாளும் சுமார் 138 கப்பல் வெளியேறும் திறன் கொண்ட ஹார்முஸ் பாதையில் தற்போது வெகு சில கப்பல்கள் மட்டுமே வெளியேற ஈரானின் IRGC படை அனுமதிக்கிறது.
ஹார்முஸ் பாதைக்குள் அதாவது வளைகுடா கடலில் மட்டும் சுமார் 800 கப்பல்கள் சரக்குகள் ஏற்றப்பட்டு தயாராக உலக நாடுகளுக்கு பயணிக்க தயாராக உள்ளது. ஆனால் ஈரான் வைத்த கட்டுப்பாடு காரணமாக மொத்த கப்பல்களுடன் வளைகுடா கடலில் நிற்கிறது.
லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்
இதே நேரத்தில் இஸ்ரேல் படைகள் தெற்கு லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. நபாட்டியா அல்-ஃபவ்கா என்ற நகரத்தை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு முன்பு அல்-அப்பாசியா மற்றும் பின்ட் ஜெபில் என்ற நகரங்களிலும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்கள் லெபனான் எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில்
மத்திய காசாவில் இஸ்ரேல் வான்தாக்குதல் ஒன்றில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். டெய்ர் எல்-பலா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு வெளியே தாக்குதல் நடைபெற்றது. இதே நேரத்தில் அமெரிக்கா மீடியேட்டர் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த ஹமாஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகள், இஸ்ரேலை ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு வலியுறுத்தியது. ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் தலைமையில் முறையான சந்திப்பை நடத்த ஒப்புக்கொண்டன. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மற்றும் காசாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு இதுவரை 750க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் போர் நிறுத்த முயற்சிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-rushes-two-oil-tankers-out-of-gulf-via-strait-of-hormuz-before-us-blockade-israeli-strikes-co-789673.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


