
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்தம் வந்துவிட்டது என நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த குண்டு வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் ‘போர் நிறுத்தம்’ என உலகமே கொண்டாடிய நிலையில், இன்று ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் மிக விலையுயர்ந்த MQ-4C Triton ட்ரோன் மாயமாகியிருப்பது மொத்த போர் நிறுத்தத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
வளைகுடா போர் ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இரு தரப்புமே இரு வாரங்களுக்குத் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன. அதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகும் என தெரிகிறது. இதற்கிடையே வளைகுடாவில் மீண்டும் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.

மாயம்
சுமார் மூன்று மணி நேரமாக பெர்சிய வளைகுடாப் பகுதியில் உளவு பார்த்துக் கொண்டிருந்த அந்த ட்ரோன், இத்தாலியில் உள்ள தனது தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அந்த டிரோன் ‘Code 7700’ என்ற அவசரக்கால எச்சரிக்கை சிக்னலை அனுப்பி இருக்கிறது. பிறகு ஈரான் எல்லை நோக்கி ஒரு சிறு திருப்பம் எடுத்தாக ஆன்லைன் ஃபிளைட் டிராக்கிங் மேப்பா பிளைட் ரேடார் 24 தெரிவிக்கிறது. அடுத்த சில நொடிகளில் அந்த டிரோன் மாயமாகியுள்ளது. அது கடலுக்குள் விழுந்ததா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று தெரியவில்லை. நொடிப்பொழுதில் ரேடாரிலிருந்து காணாமல் போனது.
இந்த ட்ரோன் ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?
MQ-4C Triton என்ற சாதாரண ட்ரோன் அல்ல; அமெரிக்கக் கடற்படையின் ஆகாயக் கண் என்றே சொல்லலாம். ஒரு ட்ரோனின் மதிப்பு மட்டும் சுமார் $200 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,700 கோடி ரூபாய்க்கும் மேல்.! இவ்வளவு விலைக்கு விற்கப்படக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் 50,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் திறன் கொண்ட இந்த டிரோனால் 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வானில் வட்டமடிக்க முடியும். கடலில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் உளவு பார்த்து அமெரிக்காவுக்குத் தகவல்களை அனுப்பும். அமெரிக்காவிடம் தற்போது இதுபோன்ற 20 ட்ரோன்கள் மட்டுமே உள்ளன.
அச்சம்
ஈரான் தனது கடல் எல்லையை வர்த்தகக் கப்பல்களுக்குத் திறந்துவிடச் சம்மதித்து, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் இது நடந்துள்ளது. இதனால் போர் நிறுத்தத்திற்குச் சிக்கல் ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது. அதேநேரம் டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தெளிவான பதில் இல்லாததால் பதற்றம் அதிகரிக்கிறது.
அமெரிக்கா செய்யும் செலவு
ஏற்கனவே அமெரிக்கா இந்த போருக்குச் செலவிடும் தொகை மலைக்க வைக்கிறது. அதாவது இந்த போருக்கு:
- ஒவ்வொரு வினாடிக்கும் அமெரிக்கா சுமார் $10,300 (சுமார் 9.8 லட்சம் ரூபாய்) செலவு செய்கிறது.
- ஒரு நாளைக்கு எனப் பார்த்தால் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்கு மட்டுமே $320 மில்லியன் (3,040 கோடி ரூபாய் ) செலவாகிறது.
- இது தவிர விமான மற்றும் கப்பல் செயல்பாடுகளுக்கு எனத் தனியாகத் தினசரி சுமார் 3,800 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு பக்கம் கோடிக் கணக்கில் பணம் தண்ணீராகச் செலவாகிறது.. இந்த லிஸ்டில் தான் உலகின் மிக விலையுயர்ந்த ட்ரோன் மாயமாகிப் பதற்றத்தை எகிற வைத்திருக்கிறது.. ட்ரோன் விழுந்த இடத்தில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிக்கை வரவில்லை.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-drone-lost-in-hormuz-strait-navy-most-expensive-drone-mq-4c-triton-vanishes-over-within-seconds-788775.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
