
International
oi-Prasanna Venkatesh
தெஹ்ரான்: டிரம்ப்-ன் ட்ரூத் சோஷியல் பதிவுக்கு பின்பு வளைகுடாவில் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா மத்தியிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை கடுமையாக வெளிப்படுத்தி, அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா ஈரானின் மின் நிலையங்களைத் தாக்கினால், சவுதி அரேபியா உள்ளிட்ட முழு வளைகுடா பிராந்தியமும் இருளில் மூழ்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை தற்போது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடரும் பேச்சுவார்த்தை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தகவல்கள் பாகிஸ்தான் வழியாகத் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்று ஈரானின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்தத் தகவல்களை ஈரான் சார்பில் கத்தார் நாடு அமெரிக்காவுக்கும் பிற வளைகுடா நாடுகளுக்கும் தெரிவித்துள்ளது ஈரான்.
அமெரிக்கா தொடர்ந்து ‘அழுத்தத்தின் கீழ் சரணடையுங்கள்’ என்ற அதே தொனியில் பேசி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தொனியை மாற்றும் வரையில் பேச்சுவார்த்தையில் எவ்விதமான தளர்வும் காட்டப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மின் நிலையத் தாக்குதல்
அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கினால், ஈரான் தரப்பில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், அதனால் வளைகுடாவில் முழு பிராந்தியமும், குறிப்பாக சவுதி அரேபியாவும் முழுமையான இருளில் மூழ்கும் என்றும் ஈரான் தெளிவாக எச்சரித்துள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி அமைப்பு வளைகுடா பிராந்தியத்தின் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை விவகாரம்
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஈரான் எந்த தளர்வையும் காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வெற்று வாக்குறுதிகளுக்கு ஈரான் ஹார்முஸ் நீரிணையைத் திறக்காது’ என்று ஈரானின் மூத்த அதிகாரி திட்டவட்டமாகக் கூறினார். அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஈரானை சரணடையச் செய்ய முயற்சிப்பதாகவும், அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
பாப் அல்-மண்டப் நீரிணை
இந்த நிலைமை கட்டுக்கடங்காமல் போனால், ஈரானின் கூட்டாளிகள் யெமன் நாட்டின் ஹவுதி படைகள் பாப் அல்-மண்டப் நீரிணையை மூடிவிடுவார்கள் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் விநியோகம் மற்றும் உலக வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஈரான் இன்று வெளிப்படையாக அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது.
ஈரானின் தளர்வு
அமெரிக்கா தனது அணுகுமுறையில் நெகிழ்வு காட்டினால் மட்டுமே ஈரானும் நெகிழ்வு காட்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் தொனி மாறவில்லை என்பதால், ஈரான் எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது.
இதே நிலைப்பாட்டை தான் ரெசிப்ரோக்கல் வரியின் போது அமெரிக்காவுக்கு எதிராக சீன கையில் எடுத்தது. தற்போது ஈரானும் இதையே முன்வைக்கிறது. மேலும் டிரம்ப்-ன் பதிவுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மின் தடை அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், ஈரானின் இந்தக் கடும் எச்சரிக்கை பிராந்திய அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்காவின் முடிவு அமெரிக்க நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தெரியும், இந்திய நேரப்படி நாளை 5.30 மணி.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-warns-trump-if-us-attacks-power-plants-saudi-arabia-dubai-qatar-will-plunge-into-complete-787955.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
