
International
oi-Halley Karthik
மாஸ்கோ: வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன் பங்குக்கு ரஷ்யாவும் குட்டையை குழப்பியிருக்கிறது. அதாவது அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்திருக்கிறது.
இந்தியாவுக்கு இரண்டு பக்கம் மார்கெட் இருக்கும். வளைகுடாவில் இருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், இப்போது இந்த இரண்டு மார்கெட்டும் க்ளோஸ் செய்யப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவுக்கு என்ன பிரச்சனை?
ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை உருவாக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு நேற்று அறிவுறுத்தினார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இத்தடை ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்திருக்கிறது.
சொந்த நாட்டு தேவை
மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடியால், உலகளாவிய எண்ணெய் மற்றும் அதன் உற்பத்திப் பொருள் சந்தைகளில் கொந்தளிப்பு நிலவுகிறது. இது விலைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது என்று நோவாக் தெரிவித்தார். வெளிநாட்டுச் சந்தைகளில் ரஷ்ய எரிசக்தி வளங்களுக்கான அதிக தேவை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் பற்றாக்குறை
ரஷ்ய அரசாங்கத்தின் அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கடந்த ஆண்டு அளவிலேயே இருப்பதால், எண்ணெய் உற்பத்திப் பொருட்களின் விநியோகம் நிலையானது. இருப்பினும், உக்ரைன் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை அதிகரித்தது மற்றும் பருவகால எரிபொருள் தேவை அதிகரித்ததால், கடந்த ஆண்டு ரஷ்யாவின் பல பிராந்தியங்களிலும், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளிலும் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டது.
ஏற்றுமதி அளவு
உயர்ந்துவரும் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தவும், பற்றாக்குறையைச் சமாளிக்கவும் ரஷ்யா பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொழில் வட்டாரங்களின் தகவல்படி, கடந்த ஆண்டு ரஷ்யா சுமார் 5 மில்லியன் மெட்ரிக் டன்கள், அதாவது ஒரு நாளைக்கு சுமார் 117,000 பீப்பாய்கள் பெட்ரோலை ஏற்றுமதி செய்தது.
இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்த தடையை பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடையில்லை. இந்தியாவிடம் சுத்திகரிப்பு ஆலைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே நாம் கச்சா எண்ணெய்யைதான் நேரடியாக வாங்கி வருகிறோம். எனவே நமக்கு நெருக்கடி இருக்காது. ஆனாலும் சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் பாதிப்பை எற்படுத்தலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/russia-petrol-export-ban-4-month-restriction-starting-april-1-to-stabilize-domestic-fuel-market-784989.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
