
India
-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகள் ஒரு பக்கம் நடக்க எஸ்ஐஆர் இறுதிக்கட்ட பணிகளும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் சிலர் சிறைபிடிக்கப்பட்டனர். நள்ளிரவைத் தாண்டியும் சுமார் 9 மணி நேரம் அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வரும் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு இன்னும் எஸ்ஐஆர் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கும் மம்தாவுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், நீதித்துறை அதிகாரிகளே எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கம்
இந்த எஸ்ஐஆர் பணிகள் முடிந்தவுடன் துணை வாக்காளர் பட்டியல்கள் தனியாக வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையே மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட ஏழு நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ள நிலையில், பாதுகாப்புக்காக மத்திய படைகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக என்ஏஐ, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது..
இச்சம்பவத்தைத் திட்டமிட்ட, உள்நோக்கம் கொண்ட செயல் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், நாட்டிலேயே மிகவும் துருவப்படுத்தப்பட்ட மாநிலம் மேற்கு வங்கம் என்றும் குறிப்பிட்டது. எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளச் சென்ற நீதித்துறை அதிகாரிகளை அச்சுறுத்தும் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது
சிறைபிடிப்பு
மால்டா மாவட்டத்தில் உள்ள காளியாசக் II BDO அலுவலகம் முன்பு தான் இந்தச் சம்பவம் நடந்தது. அதாவது புதன்கிழமை இங்கு திடீரென போராட்டம் வெடித்தது. SIR பணிகளில் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகச் சொல்லி சில வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அது ஏற்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் 4 மணியளவில் அவர்கள் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது மூன்று பெண்கள் உட்பட ஏழு நீதித்துறை அதிகாரிகளை அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். ஒரு அதிகாரியின் ஐந்து வயதுக் குழந்தையும் உள்ளே சிக்கியிருந்தது. சுமார் 9 மணி நேரமாக அவர்களை வெளியே விடவே இல்லை. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தான் அவர்களை போலீசாரால் மீட்க முடிந்தது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க வாக்காளர்கள்
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை SIR நடவடிக்கையால் அதிக வாக்காளர்களை இழந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. எஸ்ஐஆர் பணிகளால் அங்கு 63 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்கள் ஆவணங்களைக் காட்டினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் தான் இந்த நீதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தான் சிறைபிடிப்பு சம்பவம் நடந்துள்ளது. சுமார் ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு, நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் அவர்கள் மீட்கப்பட்டனர். அப்போதும் கூட போராட்டக்காரர்கள் காவல் வாகனங்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.. இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இதனால் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையும் முடக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக தரப்பு ஆளும் மம்தா பானர்ஜி அரசைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
கண்டனம்
இதற்கிடையே இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. மேற்கு வங்க அரசின் செயலை கிரிமினல் தோல்வி என்றே உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சித்தது. நீதிமன்ற அதிகாரத்திற்குச் சவால் விடும் முயற்சி என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மால்டா மாவட்ட ஆட்சியர் ஆகியோரையும் கடுமையாகக் கண்டித்தது. அரசு இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டதாகவும் விமர்சித்து.
இப்படியொரு மாநிலத்தைப் பார்த்ததே இல்லை
நீதிபதிகள் மேலும் கூறுகையில், “இரவு 11 மணி வரை உங்கள் ஆட்சியர் அங்குச் செல்லவில்லை. இரவில் நான் கடுமையான வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 வயதுக் குழந்தைக்கு உணவு, தண்ணீர் மறுக்கப்பட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலையீட்டிற்குப் பின்னரே அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நீதித்துறை அதிகாரிகளை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கே சவால் விடுப்பதாகும்… இப்படியொரு துருவப்படுத்தப்பட்ட மாநிலத்தை நாங்கள் இதுவரை கண்டதில்லை” என்று நீதிபதி கவலை தெரிவித்தனர்.
உத்தரவுகள்
மேலும், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. அனைத்து நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய படைகளை அனுப்பத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் மத்திய படைகளை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.
ஆவண சரிபார்ப்பு நடக்கும் இடங்களில் இனிமேல் ஒரு நேரத்தில் 3 முதல் 5 நபர்களுக்கு மேல் நுழையக் கூடாது என காவல்துறையினருக்குத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவர்கள் ஏப்ரல் 6ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/sir-officials-held-hostage-in-west-bengal-supreme-court-slams-wb-govt-and-orders-cbi-or-nia-probe-011-786543.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
