
International
oi-Rajkumar R
தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக கடல் வழிப் போக்குவரத்திலும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற பாகிஸ்தான் கண்டெய்னர் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமான ஹேர்மூஸ் நீரிணை வழியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டுமே ஈரான் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான மோதல் மூன்று வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் தாக்கம் நிலத்திலும் மட்டுமல்லாமல் கடல் போக்குவரத்திலும் தீவிரமாகப் பதிவாகி வருகிறது.

குறிப்பாக உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் பாதையாக உள்ள ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த போர் சூழ்நிலையை முன்னிட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சில கப்பல்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அனுமதி பெறாமல் பாகிஸ்தான் நோக்கிச் செல்ல முயன்ற செலன் என்ற கண்டெய்னர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த ஈரான் கடற்படை வீரர்கள் உடனடியாக அந்த கப்பலை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை
இதுகுறித்து பேசியுள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தாங்சிரி,” சட்ட நடைமுறைகளுக்கு இணங்காமல் அனுமதி பெறாத நிலையில் அந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்றதால், கடற்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த குறுகிய நீர்வழிப் பாதையில் செல்லும் அனைத்து கப்பல்களும் ஈரானின் கடல் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய்
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி முக்கிய பங்காற்றுகிறது. உலகில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றது என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் ஏற்படும் எந்த தடையும் உலகளாவிய எரிபொருள் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனிடையே, ஈரான் தனது நட்பு நாடுகளின் கப்பல்களும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலேயே அனுமதி வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
போர் நிறுத்தம்
அதே நேரத்தில், அமெரிக்கா இந்த பகுதிக்கு கூடுதல் கடற்படை மற்றும் பாதுகாப்புப் படைகளை அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை, அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் மூலம் 15 அம்சங்கள் கொண்ட போர் நிறுத்தத் திட்டம் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அந்த முன்மொழிவுகளை ஈரான் தரப்பு தற்போது நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா கப்பலுக்கு அனுமதி
இந்நிலையில் திடீர் திருப்பமான ஹேர்மூஸ் நீரிணை வழியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டுமே ஈரான் அனுமதி அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி,” நாங்கள் நட்பு நாடுகளாகக் கருதும் குறிப்பிட்ட சில நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளோம். சீனா, ரஷ்யா, இந்தியா, இராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார். நேற்று அனுமதி மறுத்து விட்டு, இன்று அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-blocks-pakistani-ship-then-allows-five-nations-through-hormuz-strait-784583.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
