
Business
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது என்றால் மிகையில்லை, இந்தியாவில் கச்சா எண்ணெய்-க்கு ரஷ்யா தொடர்ந்து சப்ளை செய்து வருவதால் எவ்விதமான தட்டுப்பாடும் இல்லாமல் உள்ளது. ஆனால் எல்பிஜி (Liquefied Petroleum Gas – LPG) இறக்குமதி மார்ச் 2026 மாதத்தில் கடுமையாக சரிந்துள்ளது. இதன் தாக்கம் நுகர்வோர் மட்டத்தில் எதிரொலித்துள்ளது.
மத்திய அரசு மக்களை பிஎன்ஜி இணைப்புக்கு மாற சொல்வது முதல் சிலிண்டர் விலை உயர்வு, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு வரையில் பல பிரச்சனைகள் எல்பிஜி சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா – ஈரான் தொடர்ந்து உதவி வரும் காரணத்தால் வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களின் விநியோகம் தடைப்படவில்லை, ஆனாலும் இந்தியாவுக்கான எல்பிஜி சப்ளையில் பெருமளவு சரிந்துள்ளது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் கூடுதல் அளவில் இந்தியாவுக்கு LPG வழங்கியிருந்தாலும், மொத்த இறக்குமதி 40%க்கும் மேல் குறைந்துள்ளது. இது உள்நாட்டு விநியோகத்தில் பெரும் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. இந்த சரிவுக்குப் முக்கிய காரணமாக இருப்பது, மத்திய கிழக்கு போரால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தான்.
உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் LPGயில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஹார்மூஸ் பாதையில் சென்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஏற்பட்ட தடைகள், முடக்கங்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, மார்ச் மாதத்தில் இந்தியா பெற்ற மொத்த LPG இறக்குமதி சுமார் 1.22 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. இது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களை ஒப்பிடும் போது சுமார் 40%க்கும் மேல் குறைவாகும்.
பொதுவாக இந்தியாவுக்கு எல்பிஜி சப்ளையர்கள் என்றால் UAE, கத்தார், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகள் தான். இவை அநைத்தும் ஹார்மூஸ் வழித்தடத்தை நம்பியிருக்கும் காரணத்தால் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, UAEயில் இருந்து வரும் சப்ளை மிகவும் குறைந்து.
அமெரிக்கா மற்றும் ஈரான்
இந்தியாவின் எல்பிஜி சப்ளை குறைபாட்டை சமாளிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் ஓரளவுக்கு உதவியுள்ளது என்பது உண்மை தான். மார்ச் மாதத்தில் அமெரிக்கா 4.2 லட்சம் டன் LPG வழங்கி இந்தியாவின் மிகப்பெரிய சப்ளையராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய மாதங்களை விட கணிசமான உயர்வாகும்.
இதேபோல், கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் LPG ஏற்றுமதி மீண்டும் தொடங்கி, 43,000 டன் அளவில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக அர்ஜென்டினா மற்றும் மலேசியாவிலிருந்தும் சிறிய அளவில் எல்பிஜி சப்ளை கிடைத்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி உயர்வு
இந்தியாவின் LPG தேவையில் சுமார் 60% இறக்குமதியை தான் சார்ந்துள்ளது. இதனால் இறக்குமதி குறைந்ததும் உடனடியாக பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதை சமாளிக்க, மத்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பெட்ரோகெமிக்கல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களை LPG தயாரிப்புக்கு மாற்றுமாறு அறிவுறுத்தியது.
இதன் விளைவாக, மார்ச் நடுப்பகுதிக்குள் உள்நாட்டு LPG உற்பத்தி சுமார் 40% வரை உயர்ந்தது. ஆனால் இது நாட்டின் முழு தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
மருந்து, உணவு, கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகளில் பெட்ரோலியம் மூலப்பொருட்களை தேவை அதிகரித்துள்ளதால், அரசு இந்த மாற்றத்தை படிப்படியாக திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. இதனால் இனி வரும் காலக்கட்டத்திலும் உள்நாட்டு LPG உற்பத்தி மீண்டும் குறையக்கூடும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/lpg-imports-drop-40-in-march-despite-us-iran-help-cooking-gas-shortage-risk-looms-for-indian-ho-786899.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
