
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அங்கு ஆட்சியைப் பிடிக்க பாஜக துடிக்கும் நிலையில், தேசிய தலைவர்களை வங்காளத்தின் மூலை முடுக்கெல்லாம் களமிறக்கியுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வரும் 23 மற்றும் 29 எனக் கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு 4வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் திரிணாமுல் களமிறங்குகிறது. மம்தாவின் கோட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற தீவிரத்தோடு பாஜக இறங்குகிறது. இதனால் போட்டி கடுமையாக உள்ளது.

கடும் போட்டி
இந்த முறை மேற்கு வங்கத்தை விட்டுவிடவே கூடாது என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. பாஜகவின் தேர்தல் வியூகத்தின்படி, தேசியத் தலைவர்கள் வங்கத்தில் கிட்டத்தட்ட முகாமிட்டுவிட்டனர் எனச் சொல்லும் அளவுக்குத் தொடர்ச்சியாகப் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் பிரச்சாரம் மேலும் தீவிரமடைய உள்ளது.
அமித் ஷாவின் ‘ஸ்கோர் 30’!
இந்த மேற்கு வங்க தேர்தல் களத்தில் மற்ற அனைத்துத் தேசியத் தலைவர்களையும் விட, அமித் ஷா தான் முன்னணியில் இருக்கிறார். அவர் மட்டும் மொத்தம் 30 பேரணிகளில் உரையாற்ற உள்ளார். அதேநேரம் அவர் வெறுமன பிரச்சார கூட்டங்களோடு நின்றுவிடுவதில்லை. களத்தில் இறங்கி கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதிலும், வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதிலும் அமித் ஷா காட்டும் தீவிரமாக இறங்கியுள்ளார். இது உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடி மற்றும் யோகியின் 11:11 வியூகம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் தலா 11 பேரணிகளில் பங்கேற்கின்றனர். மோடியின் வளர்ச்சி அரசியல் மற்றும் யோகியின் அதிரடி பிம்பம் ஆகிய இரண்டையும் முன்வைத்து, முக்கியத் தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அமித் ஷாவின் 30 பேரணிகள் மற்றும் மோடி- யோகியின் தலா 11 பொதுக் கூட்டங்கள் அங்குக் களத்தில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் நம்பிக்கையோடு உள்ளனர்.
அதேநேரம் பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரம் இத்தோடு நின்றுவிடுவதில்லை. மாஜி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெண் வாக்காளர்களைக் கவரக் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் 13 பேரணிகளில் கலந்து கொள்கிறார். இது தவிர பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் 10 பேரணிகள், திரிபுரா பாஜக முதல்வர் மாணிக் சாஹா 9 பேரணிகள், இமாச்சல பிரதேச பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா & எம்பி பிப்லப் குமார் தேவ் தலா 8 பேரணிகளில் பங்கேற்கிறார்கள். இது போக ஜே.பி. நட்டா & ராஜ்நாத் சிங் ஆகியோர் தலா 6 பேரணிகளில் கலந்து கொள்கிறார்கள்.
பாஜக
அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் களத்தில் குதிக்கின்றனர். நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் 7 பேரணிகளிலும், நடிகை ஹேமமாலினி பல்வேறு தேர்தல் நிகழ்வுகளிலும் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
டெல்லித் தலைவர்கள் வங்காளத்தில் முகாமிட்டுள்ள விதம், மேற்கு வங்கதேச தேர்தலை பாஜக எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறது என்பதைக் காட்டுகிறது. “தீதி”யின் கோட்டையைத் தகர்க்குமா இந்த “தாமரை”ப் படை? பொறுத்திருந்து பார்ப்போம்!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/bjp-plan-for-west-bengal-election-2026-amit-shah-modi-yogi-leads-bjp-campaign-with-50-rallies-789397.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


