
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலவும் மோதல் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளைச் சர்வதேச அளவில் ஏற்படுத்தும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஏழு அம்ச கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் தொடங்கிய போது ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். ஆனால், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இந்த போரால் ஏற்படும் பாதிப்புகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
ஏழு அம்ச திட்டம்
இதற்கிடையே அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரிவான ஏழு அம்ச திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது. மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்த ஏழு விஷயங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் இதில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிராந்தியத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த இதுவே ஒரே வழி எனவும் ஈரான் திட்டவட்டமாகக் கூறுகிறது.
அதிகாரி சொல்வது என்ன
மாறிவரும் போர்க்கள சூழ்நிலைகளையும், ஈரானின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வழக்கமான போர் நிறுத்த நிபந்தனைகளைத் தாண்டியும் ஈரான் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியுள்ளது. அவை ராணுவ, அரசியல், பொருளாதார மாற்றங்களை நாடுகின்றன.
7 பாயிண்டுகள்
- தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது. அமெரிக்கா இனி எப்போதும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதை உறுதியளிக்க வேண்டும்.!
- மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூட வேண்டும். இது அமெரிக்க ராணுவத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக இருக்கும்!
- அனைத்து பிராந்திய மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் சிக்கலுக்கு நிரந்தர முடிவு காண நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் ஒரு தெளிவான விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். அது ஈரானின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும்.
- ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
- மின்சாரத்திற்காகவே அணுசக்தி திட்டத்தை மேற்கொள்கிறோம். இதற்கு முழு ஆதரவு தரப்பட வேண்டும். வழக்கமான சோதனைகளுக்கு ஈரான் உடன்படும்!
- அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
ஈரான் திட்டவட்டம்
இந்த ஏழு பாயிண்டுகளையும் ஏற்றுக் கொண்டால் போரை முடிவுக்குக் கொண்டு வரச் சம்மதிப்பதாக ஈரான் கூறுகிறது. இத்தனை காலம் மேற்பார்வைக்கு இணங்காமல் ஈரான் இருந்த நிலையில், இப்போது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (IAEA) மேற்பார்வைக்கு உட்பட சம்மதித்துள்ளது. அதற்கு இணங்கி, தனது அணுசக்தி திட்டத்தின் அம்சங்களை மேற்கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடும்
அதேநேரம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதே இதன் கேள்வி.. மற்ற கோரிக்கைகள் கூட ஓகே.! ஆனால் வளைகுடாவில் இருக்கும் அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூடுவது என்பதை அமெரிக்கா ஏற்க வாய்ப்பே இல்லை.. உலகெங்கும் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை நிறுவியுள்ளது. இதுவே அமெரிக்காவுக்கு ஒருவித கண்ட்ரோலை தருகிறது. அந்த தளங்களை மூட சொல்வதை அமெரிக்கா ஏற்க வாய்ப்பே இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/what-are-the-7-iran-conditions-to-end-middle-east-crisis-from-full-base-closure-to-hormuz-control-784257.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
