
India
-Hema Vandhana
இடாநகர்: வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு என அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் ஒளிந்திருந்த 3 புதிய மர்ம உயிரினங்களை விஞ்ஞானிகள் இன்று உலகிற்கு காட்டியுள்ளார்கள்.. இது ஏதோ கற்பனை கதையில் வரும் பூச்சிகள் அல்ல.. நிஜமாகவே நம் இந்திய மண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அதிசயம்.. அது என்ன உயிரினம்? அதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் இயற்கை வளங்களுக்கும் அரிய வகை உயிரினங்களுக்கும் பெயர் பெற்றது.. இங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இன்று ஒரு மிக முக்கியமான உயிரியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம்
ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் டூபிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதுவரை உலகிற்கு தெரியாத 3 புதிய வகை வண்டுகளைக் கண்டறிந்துள்ளார்கள்..
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ரோனோ ஹில்ஸ் (Rono Hills) மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன..
இந்த புதிய வண்டுகள் “ரோவ் பீட்டில்'” (Rove Beetle) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவை.. பொதுவாக மெகாலோபினஸ் (Megalopinus) என்ற இனத்தைச் சேர்ந்த இந்த வண்டுகள் பார்ப்பதற்கு மிகவும் விசித்திரமான உருவ அமைப்பைக் கொண்டுள்ளன.. ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டறிந்த இந்த 3 புதிய வகைகளுக்கும் ‘அருணாச்சலென்சிஸ்’, “மிதுன்’ மற்றும் ‘மைக்ரோஸ்” எனப் பெயரிட்டுள்ளார்கள்..
வண்டு வகைகள்
இதில் குறிப்பாக “மெகாலோபினஸ் மைக்ரோஸ்” (Megalopinus micros) என்ற வண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.. காரணம், இது அந்த இனத்திலேயே மிகச்சிறிய அளவைக் கொண்டது.. இதன் முழு உடல் நீளமே வெறும் 1.9 மில்லிமீட்டர் மட்டுமே என்பது ஆச்சரியமான விஷயமாகும்.
இவ்வளவு குட்டி உருவத்தில் இருந்தாலும் இதன் உடல் அமைப்பு மற்றும் குணாதிசயங்கள் மற்ற வண்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுவதால் இது ஒரு தனி இனம் என உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்த வகை வண்டுகள் பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்கள் மற்றும் அழுகிய மரக்கட்டைகளுக்கு அடியில் வசிக்கின்றன.. காடுகளில் இலைகள் மக்கிப்போய் கிடக்கும் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன..
இவற்றுக்கு ஆந்தை போன்ற ஒரு தோற்றம் தலையில் இருப்பதே இவை விசித்திரமாகத் தெரியக் காரணமாகும்.. அருணாச்சல பிரதேசத்தின் பல்லுயிர் பெருக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது..
சிறிய உயிரினங்கள்
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகள் மூலம் அருணாச்சல பிரதேச காடுகளில் இன்னும் எத்தனை ஆயிரக்கணக்கான அறியப்படாத சிறிய உயிரினங்கள் இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக 8 வருஷத்துக்கு முன்பே இத்தகைய ஆய்வுகள் தொடங்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக 3 புதிய இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. இந்த கண்டுபிடிப்பு உயிரியல் ஆய்வாளர்கள் மத்தியில் இன்று ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.. காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற அரிய வகை உயிரினங்களை நாம் அழியாமல் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்..!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/arunachal-forests-mysterious-discovery-why-the-face-of-these-3-creatures-shocked-scientists-today-011-786861.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
