
Business
oi-Prasanna Venkatesh
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக இந்திய பங்கு சந்தை தொடர்ந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்த போரின் முதல் நாளில் இருந்து இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் டிரம்ப்-ன் ட்ரூத் சோஷியல் பதிவுகளால் சில நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்தாலும், பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
இன்று வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவில் இருந்து மீண்டுள்ளது. காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2.26 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் மாலை வர்த்தகம் முடியும் போது 0.25 சதவீதம் உயர்ந்து 185.23 புள்ளிகள் உயர்ந்து 73,319 புள்ளிகளில் முடிந்துள்ளது.

ஈரான் போர் துவங்கிய நாளான பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய முக்கிய குறியீடுகள் தலா 10% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இதேபோல், நிஃப்டி 500 குறியீடும் 10% சரிவை சந்தித்துள்ளது. சில நிறுவனங்களின் பங்குகள் 40% வரை சரிந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய பங்கு சந்தைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு இது என்பதால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள், ஈடிஎப், மியூச்சுவல் பண்ட், பியூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் சந்தை முதலீட்டாளர்கள் என அனைத்தும் அனைத்து தரப்பினரும் பெரும் இழப்பை இந்த 35 நாளில் எதிர்கொண்டு உள்ளனர்.
இதன் விளைவாக ஈரான் போர் துவங்கும் முன் அதாவது பிப்ரவரி 27ஆம் தேதியன்று 463.5 லட்சம் கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தை நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, ஏப்ரல் 2ஆம் தேதியன்று 422.4 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம், இந்திய முதலீட்டாளர்களும், இந்திய சந்தையில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இக்காலக்கட்டத்தில் சுமார் 41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்வத்தை இழந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்திய பங்குகளை பெருமளவில் விற்றுள்ளனர். மொத்தமாக 1.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் cash segment-ல் விற்கப்பட்டுள்ளன. இந்த வெளியேற்றம், சந்தை சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இக்காலக்கட்டத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி மீண்டும் நுழைவதற்கான சரியான என்டரி பாயின்ட்காக காத்திருக்கின்றனர். பங்குச்சந்தையில் எதிர்காலம் குறித்து தெளிவான பதில் யாரிடமும் இல்லை என்பதை நிதர்சனமான உண்மை. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை இல்லாதது, தினமும் மாறுப்பட்ட கருத்தை டிரம்ப் பேசுவது ஆகியவற்றின் காரணமாக மொத்த சந்தையும் செல்லும் திசை தெரியாமல் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது, இந்தியாவில் பணவீக்கம் உயர்வதற்கும், நிறுவனங்களின் லாபம் குறைவதற்கும் வழிவகுக்கும். இது மொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமீபத்திய உரையில், அடுத்த 2-3 வாரங்களில் தாக்குதல் முடிவடையலாம் என தெரிவித்தாலும், அதற்குள் தாக்குதல்கள் கடுமையாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். இதனால், குறுகிய காலத்தில் சந்தை தடுமாற்றம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், பயத்தில் பங்குகளை விற்பது சரியான தீர்வாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்திய சரிவால் சந்தை மதிப்பீடுகள் சீராகியுள்ளன. இதனால், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தரமான பங்குகளை தேர்வு செய்து, நீண்ட கால அடிப்படையில் கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்வது முக்கியம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/sensex-nifty-crash-10-since-iran-war-began-41-lakh-crore-investor-wealth-wiped-out-what-shoul-786627.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
