
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே அங்குக் களம் சூடுபிடித்துவிட்டது. இதற்கிடையே அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் கடந்த முறை 8 கட்டமாகத் தேர்தல் நடந்த நிலையில், இந்த முறை இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ்
இதற்கிடையே மேற்கு வங்க தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 291 தொகுதிகளில் திரிணாமுல் போட்டியிடுகிறது. அந்த அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் திரிணாமுல் காங்கிரஸ் இன்று ஒரே நாளில் அறிவித்துள்ளது. மம்தா பானர்ஜியும், அவரது உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் இந்த வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர்.
பதிலடி
பாஜக நேற்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 144 பேரை அறிவித்த நிலையில், இன்று திரிணாமுல் மொத்த வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமது முன்னாள் தளபதியும், தற்போதைய எதிரியுமான பாஜகவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்து தென் கொல்கத்தாவின் பபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் இதுவே மிக முக்கியமாகக் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக மாறியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் 52 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும், 95 பேர் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் என்றும், 47 பேர் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அபிஷேக் பானர்ஜி அறிவித்தார். இதில் 291 தொகுதிகளில் திரிணாமுல் தனித்துக் களமிறங்குகிறது. டார்ஜிலிங்கில் உள்ள மீதமுள்ள மூன்று தொகுதிகளில் பாரதிய கோர்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா போட்டியிடுகிறது.
நந்திகிராம்
சுவாரஸ்யமாக, மம்தா பானர்ஜி, கடந்த முறை சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த பூர்வா மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதியில் இம்முறை போட்டியிடவில்லை. அந்த தொகுதியில் அபிஷேக் பானர்ஜி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நிமிடத்தில் பிளானை மாற்றிய மம்தா அங்கு பவித்ர கர் என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த பவித்ர கர் சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். இவர் வேட்பாளர் பட்டியலை அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் திரிணாமுலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
சுவேந்து அதிகாரி, நந்திகிராம் மற்றும் பபானிபூர் என இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இது முக்கியமான ஒரு அம்சமாகும். மேற்கு வங்க தேர்தலுக்கு பாஜக அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அதிகாரிக்கு இரு தொகுதிகளில் வாய்ப்பளித்தது, தேர்தல் பிரச்சாரத்தில் அவரது தலைமைத்துவத்துக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
மம்தாவின் கோட்டை
நந்திகிராம் சுவேந்து அதிகாரியின் சொந்தத் தொகுதி ஆகும். ஆனால், அவரை பவானிபூரில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவந்து அதிகாரியை களமிறக்கியுள்ளது பெரிய ரிஸ்க் தான். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி, பல தசாப்தங்களாக தென் கொல்கத்தாவின் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார். தென் கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகும் எம்எல்ஏ தேர்தலிலும் அங்கிருந்து வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் மம்தாவின் விசுவாசியாக இருந்த சுவேந்து அதிகாரி, 2021 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் ஐக்கியமானார். 2021ல் நந்திகிராமில் திரிணாமுல் மம்தாவை வெறும் 2,000-த்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் வேறு வழியில்லாமல் மம்தா மீண்டும் பவானிபூரில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பபானிபூர் மம்தாவின் கோட்டையாகும். இதனால் இந்த முறை போட்டி கடுமையாக மாறியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/west-bengal-trinamool-candidate-list-mamata-banerjee-vs-suvendu-adhikari-rematch-in-bhabanipur-782111.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
