
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து கடந்த 29ம் தேதி ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. அதில் ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகு ஈரான் உடனடியாக வீழும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த போர் 3வது வாரத்தில் நுழைந்துள்ளது.

தொடர் தாக்குதல்
ஒரு பக்கம் ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.. ஈரானின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேலை நோக்கித் தாக்கும் ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற அமெரிக்கப் படைத் தளங்களை டார்கெட் செய்தும் தீவிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.
எச்சரிக்கை
இதற்கிடையே இந்த மோதல் பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடம் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கிடையே அமெரிக்கக் குடிமக்கள் ஈராக்கை விட்டு வெளியேற புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக இப்போதே ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரகம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம், “ஈரான் ஆதரவு பயங்கரவாத போராளிக் குழுக்களால் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால் ஈராக்கில் தங்கும் அமெரிக்கர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாடுகள்
மத்திய கிழக்கு முழுவதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அமெரிக்க ராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனால் நிலைமை மோசமாகியுள்ள சூழலில், அமெரிக்கா இதுவரை 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தனது குடிமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா சனிக்கிழமையன்று ஓமானில் உள்ள அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க.. ஈரானின் உர்மியா நகரில் பொதுமக்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புத் தளங்களின் இருப்பிடங்கள் குறித்த விவரங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி மத்திய கிழக்கு மோதலில் நாளுக்கு நாள் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது.
பிராந்திய போர்
அதேநேரம் தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு வருவது போன்ற சூழல் எதுவும் தெரியவில்லை. ஒரு பக்கம் ஈரான் தலைமையை காலி செய்து, பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா முயன்றது. ஆனால், அது ஈரானை மொத்தமாக காலி செய்ய போதுமானதாக இல்லை. ஈரான் நிலையாக நின்று திரும்ப அடிக்கிறது. இந்த இடியாப்ப சிக்கல் மேலும் சில வாரம் நீளும் என அஞ்சப்படுகிறது. அப்படி அதிகரித்தால் உலகளவில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கும். மேலும், எப்போது வேண்டுமானாலும் பிராந்திய போராகவும் வெடிக்கும்.!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/is-middle-east-tension-spreading-us-embassy-urges-all-of-their-citizens-leave-iraq-amid-iran-threat-781529.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
