
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்களுக்கு, எரிபொருளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த, KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. மற்றொரு விமானம் வால் பகுதி உடைந்த நிலையில், தரையிறக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது. இதை விபத்து என்று அமெரிக்கா சொன்னாலும், ஈரான் தாக்குதலால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய விமானம்
ஈரான் விஷயத்தில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. போரை தொடர வேண்டும், ஈரானில் நிலவும் அரசை வீழ்த்தி, தனக்கு ஆதரவான அரசை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். எனவே, அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதல் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.
எரிபொருள் நிரப்பும் விமானம்
அமெரிக்காவின் போர் கப்பல்களான யுஎஸ்எஸ் ஜெரால்டு போர்டு மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஆகியவை ஈரான் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன. இந்த கப்பல்கள் இரண்டும் விமானம் தாங்கி போர் கப்பல்களாகும். இதில் F-15, F-16 மற்றும் F-35 ரக விமானங்கள் இருக்கின்றன. இவைதான் ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்கள் பல ஆயிரம் கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டவை. ஆனால், அதற்கு தேவையான எரிபொருளை நடுவானில் நிரப்ப வேண்டும்.
எப்படி நடந்தது?
இதற்காக அமெரிக்காவிடம் KC-135 ரக விமானங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான லிட்டர் எரிபொருளை சுமந்து செல்லும் இந்த விமானங்கள், நடுவானில் மற்ற போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும்.
இப்படி நேற்று மற்ற விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்தபோதுதான், KC-135 ரக விமானம் ஒன்று ஈராக்கில் விழுந்து வெடித்திருக்கிறது. இதில் மொத்தம் 6 பேர் இருந்திருக்கின்றனர். அதில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மீதமிருக்கும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா அறிக்கை
இது குறித்து அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிக்கையில், சம்பவம் எதிரியின் தாக்குதல் காரணமாகவோ, அல்லது தவறு காரணமாகவோ ஏற்படவில்லை என்றும், விபத்தாக நடத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விசாரணை முடிந்த பின்னர் உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளியிடப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரான் மீது சந்தேகம்
அமெரிக்கா சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இந்த விபத்துக்கு ஈரானின் தாக்குதல் கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெினல் ஈரானிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் இருக்கின்றன. இந்த ஏவுகணைகளில் ஏதேனும் ஒன்று KC-135 ரக விமானத்தை தாக்கியிருக்கலாம். KC-135 விமானங்கள் இன்னொரு சிறிய விமானத்திற்குதான் எரிபொருளை நிரப்பும். அப்படி இருக்கையில் எப்படி இரண்டு KC-135 ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கும்? என கேள்வி எழுகிறது.
ஈரானின் தாக்குதலை மறைக்கவே அமெரிக்கா இப்படி சமாளிக்கிறதோ? என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-military-confirms-4-deceased-in-kc-135-aircraft-crash-over-western-iraq-781059.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
