
International
oi-Rajkumar R
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போர் சூழலில், புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில், இஸ்ரேல் விமானப்படை மேற்கொண்ட வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் ராணுவ தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லாரிஜானி தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கோலம்ரெசா சுலைமானியும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான் நகரை மையமாகக் கொண்டு தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை, ஈரானின் முக்கிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ராணுவ முகாம்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் ஈரான் மோதல்
மொசாட் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஏரளமான இஸ்ரேலின் போர் விமானங்கள் இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய ராணுவ கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிரிஷ் மற்றும் அவாஸ் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அலி லாரிஜானி மரணம்
ஆனால், இஸ்ரேல் கூறிய இந்த தகவல்களை இதுவரை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. குறிப்பாக அலி லாரிஜானி மற்றும் கோலம் ரெசா சுலைமானி உயிரிழப்பு குறித்து எந்த உறுதியான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கியயிருந்தன.
இஸ்ரேல் தாக்குதல்
அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை தொடங்கியதால், கடந்த இரண்டு வாரங்களாக இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், “ஈரானில் மக்கள் எழுந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும்” என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகுவின் பேச்சு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது நேரடியாக ஈரானின் உள்நாட்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இந்த மோதல், சாதாரண இரு நாடுகளுக்கிடையேயான போராக இல்லாமல், உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய மோதலாக மாறி வருகிறது.
மொசாட் ரகசிய ஆபரேஷன்
குறிப்பாக எண்ணெய் சந்தை, சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள் மீது இதன் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், உலக நாடுகள் இந்த நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு ஈரான் அரசுக்கு எதிராக போராடி வரும் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானைப் பொருத்தவரை பிரதமர் அதிபர் உள்ளிட்டவர்கள் இருந்தாலும் அவர்கள் அதிகாரம் இல்லாதவர்களாகவே கருதப்படுகின்றனர். ஈரானின் உயர்தலைவர்களாகக் கருதப்படும் மதகுருக்களுக்கே முழு அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-strike-on-iran-sparks-tension-claims-of-top-leader-death-782285.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
