
International
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தம் அறிவித்த பின்பு, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாட்டின் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து அதை உடனடியாக அமலாக்கம் செய்துள்ளார். ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா முக்கிய இடத்தை வகிக்கிறது என அட்லான்டிக் கவுன்சில் தரவுகள் கூறுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க உளவுத்துறை முக்கியமான விஷயத்தை வெளியிட்டுள்ளது, சீனா அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த முக்கிய தகவலை சிஎன்என் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.

லெபனான் தாக்குதல்
ஈரான் – அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் உச்ச நிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் ஈரானின் முக்கிய கோரிக்கையான லெபனான் மீதான தாக்குதலை கைவிட அமெரிக்கா இஸ்ரோல் உடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கும் வேளையில், ஈரான் தலைவர்கள் சனிக்கிழமை அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்தனர். இத்தகைய சூழ்நிலையில் சிஎன்என் அறிக்கையும், உளவு தகவல்களும் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய அமெரிக்க உளவுத்துறை தகவல் படி சிஎன்என், சீனா தோளில் தூக்கிச் செல்லக்கூடிய வகையிலான MANPAD எனப்படும் வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறியுள்ளது. இந்த அமைப்புகள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சிறிய ஆனால் சக்திவாய்ந்த ஏவுகணைகள் ஆகும்.
மூன்றாம் நாடுகள் வழியாக ஏற்றுமதி
சீனா இந்த ஏவுகணையை நேரடியாக அனுப்பாமல் மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஏற்றுமதியின் உண்மையான இடத்தை மறைக்க முயற்சி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த உளவு தகவல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை மற்றும் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் ஆகியவை எவ்விதமான விளக்கமும் இதுவரையில் தெரிவிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கும் இந்த அமைப்புகள் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உயர்மட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து வரும் இந்த நேரத்தில் சீனா ஈரானுக்கு ஆயுதம் கொடுத்து உதவுவது அமெரிக்க தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். அமெரிக்கா – ஈரான் இடையிலான ஆறு வார கால போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிகளை விவாதிக்க சனிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 5 நட்சத்திர ஹோட்டலான Serena Hotel-ல் இரு நாட்டு அதிகாரிகளும் கூடியுள்ளனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/china-preparing-to-supply-manpads-air-defense-missiles-to-iran-via-third-countries-us-intelligence-789025.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


