
Business
oi-Prasanna Venkatesh
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர் கப்பால்கள் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் தடாலடியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், மத்திய கிழக்கில் அமைதி திரும்பவில்லை, மாறாக நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உலகின் மிக முக்கிய எண்ணெய் வழித்தடங்கள் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் புதிய தாக்குதல்
சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவின் தினசரி உற்பத்தித் திறன் சுமார் 6 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது. கிழக்கு – மேற்கு பைப்லைன் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் அளவும் சுமார் 7 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம் பின்பு போர் தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்ட சவுதி அரேபிய அரசு குரைஸ் (Khurais) மற்றும் மனிஃபா (Manifa) எண்ணெய் வயல்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக சவுதியின் மொத்த உற்பத்தியில் சுமார் 5 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
ஹார்முஸ் வழித்தடம்
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை. வியாழக்கிழமை அன்று ஹார்முஸ் வழித்தடம் வழியாக செல்லும் கப்பல் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் கண்ணிவெடி வைத்துள்ளதாக அறிவித்து மற்று வழித்தடத்தை அறிவித்துள்ளது.
மீண்டும் 100 டாலர்
இருப்பினும், அமெரிக்கா-ஈரான் இடையேயான இரு வார நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் லெபனான் உடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதால், சந்தை சற்று தளர்வடைந்துள்ளது. இதனால் விலை இன்னும் வாராந்திர அடிப்படையில் இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளது.
பிரெண்ட் க்ரூட் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் விலை ஒரு பேரலுக்கு 98 டாலராக உள்ளது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) 100 டாலரை இன்று தாண்டியுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தி பிரச்சனைகள் தொடர்ந்தால், உலக எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமையும். இந்த சப்ளை இடைவெளியை ரஷ்யா தீர்க்க திட்டமிட்டு வருவது மற்றொரு முக்கியமான விஷயமாக உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/us-iran-ceasefire-saudi-attacks-cutting-600-000-bpd-production-oil-prices-rise-to-100-usd-hormu-788721.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


