
International
oi-Prasanna Venkatesh
ஈரான் போர், பாகிஸ்தானில் நாளை பேச்சுவார்த்தை பரபரப்புக்கு மத்தியில் ஐரோப்பிய விமான நிலையங்கள் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹார்முஸ் வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தொடங்காவிட்டால், கோடை விடுமுறை காலத்தில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று ஐரோப்பாவின் Airports Council International (ACI) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் ஹார்முஸ் பாதை போக்குவரத்து 99 சதவீதம் முடக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. இது ஐரோப்பிய விமான போக்குவரத்து சந்தையில் கோடை விடுமுறை பயணத்தை பாதிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது என புலம்ப துவங்கியுள்ளனர்.

ஹார்முஸ்-ன் தற்போதைய நிலை
ஈரான் அரசு தொலைக்காட்சி IRIB டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளபடி, கடந்த 24 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெறும் 4 கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. அவற்றில் இரண்டு ஈரானிய கப்பல்கள், ஒன்று ஈரானிய கச்சா எண்ணெய் டேங்கர் மற்றும் ஒன்று ரஷ்ய கச்சா எண்ணெய் டேங்கர் ஆகும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் இந்த முக்கிய நீர்வழி பாதை இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இது உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்து, ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட் எரிபொருள் விலை பெரும் உயர்வு
மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பிப்ரவரி இறுதியில் இருந்து விமான எரிபொருள் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. சர்வதேச விமான நிறுவனங்கள் அமைப்பான IATA தரவுகளின்படி, கடந்த வார இறுதியில் ஒரு டன் விமான எரிபொருளின் விலை 1,650 டாலராக உயர்ந்தது.
ஆசியாவில் விலை 163 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் 138 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது
ஐரோப்பாவுக்கு கடைசி ஏற்றுமதி
ஐரோப்பாவுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வந்த கடைசி விமான எரிபொருள் சரக்கு நாளை கோபன்ஹேகன் செல்ல உள்ளது. இதே டேங்கர் திங்கள்கிழமை ராட்டர்டாம் துறைமுகத்தில் ஒரு பகுதி சரக்கை சேர்த்தது. பிரிட்டனுக்கு செல்லும் கடைசி டேங்கர் மேட்டிகா கப்பல் மூலம் செவ்வாய்க்கிழமை கெண்ட் துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த சரக்குகள் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவை.
ஐரோப்பா – வளைகுடா
ஐரோப்பா தனது ஜெட் எரிபொருளில் 60 சதவீதத்துக்கு மேல் வளைகுடா நாடுகளின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தான் பெறுகிறது. இதில் 40 சதவீதத்துக்கு மேல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த வழி மூடப்பட்டதால் ஐரோப்பிய விமான சேவைகள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஐரோப்பாவுக்கு காலம் காலமாக ரஷ்யா அனைத்து விதமான எரிபொருள் சப்ளை செய்து வந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை மொத்தமாக நிறுத்தியது. இதை தொடர்ந்து அமெரிக்காவிடம் இருந்தும், வளைகுடா நாடுகளில் இருந்தும் பெற்று வருகிறது.
பாகிஸ்தான் பேச்சுவார்த்தை
ஐரோப்பாவுக்கு செல்லும் 90 சதவீத கப்பல்கள் யெமன் நாட்டின் பாப் அல் மண்டெப் பாதையில் நுழைந்து செங்கடலில் பயணித்து சவுதியின் மேற்கு துறைமுகத்தில் சரக்குகளை லோடு செய்துக்கொண்டு சுயஸ் கால்வாய் வாயிலாகவே சென்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் மற்றும் பாப் அல் மண்டெப் பாதை என இரண்டும் ஈரான் கட்டுப்பாட்டிற்கு வரும். இது கூடுதல் பாதிப்பை எற்படுத்தும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/europe-3-weeks-from-jet-fuel-crisis-hormuz-closure-threatens-summer-holiday-flights-as-prices-doubl-788841.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
