
Business
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா மோதல் இந்தியாவின் ஷூ மற்றும் காலணி தொழில்களை பெரிதும் பாதித்துள்ளது. பெட்ரோலியம் பொருட்களின் விநியோகச் சங்கிலி தடைபட்டதால் உற்பத்திச் செலவு உயர்ந்து, மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் போர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு 15 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தை நிபுணர்கள் உடனடி நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஷூ மற்றும் காலணி தொழிற்சாலை
இந்தியாவில் தற்போது வேமாக வளர்ந்து வரும் துறையில் ஒன்றாக மாறியிருக்கும் ஷூ தயாரிப்பு ஈரான் போரால் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது, இந்த போர் நிறுத்தம் மூலம் எத்தகைய மாற்றங்கள் நடக்கும்..?
நொய்டாவில் செயல்படும் எஸ் ஆர் யூனிவர்சல் என்ற நிறுவனம் இந்திய கடற்படை மற்றும் Zara, Bata, Fizzy Goblet போன்ற பிரபல பிராண்டுகளுக்கு ஷூ சோல்களை வழங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை ஒரு நாளைக்கு 3,000 முதல் 4,000 சோல்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் ஈரான் போரால் தற்போது உற்பத்தி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர சுழற்சியில் இயங்கி வந்த தொழிற்சாலை இப்போது 8.5 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. இதனால் பல பணியார்கள் பணியை விட்டு நீக்கப்பட்டு உள்ளனர்.
ஈரான் போர் நிறுத்தப்பட்டதால் உடனடியாக அனைத்தும், லைட் ஸ்விட்ச் ஆன் செய்வது போல் சரியாகிவிடும் என நம்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான உதாரணம். ஏற்கனவே ஒன்இந்தியா செய்தியில் ஈரான் போர் முடிந்தாலும் உற்பத்தி சந்தையும், விநியோக சந்தையும் சீரடைய குறைந்தது 50-60 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோகெமிக்கல் பொருட்கள் விலை 50% உயர்வு
ஈரான் போர் காரணமாக ஷூ சோல்களில் பயன்படும் பாலியூரிதீன் (PU) ரப்பர் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பாலியூரிதீன் (PU) ஒரு பெர்ரோகெமிக்கல் வகையை சார்ந்தது, மத்திய அரசு இதற்கு ஏற்கனவே இறக்குமதி வரியை ஜீரோ ஆக அறிவித்திருந்தாலும், குவைத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோனோ-எத்திலீன் கிளைகால் (MEG) விநியோகம் முழுவதும் தடைபட்டுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த சோல் உற்பத்திச் செலவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நிறுவனத்தின் வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய ஷூ தொழில் முழுவதும் பாதிப்பு
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஷூ உற்பத்தி நாடாக உயர்ந்துள்ளது. சுமார் 44.2 லட்சம் மக்கள் இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர். மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக செயற்கை ரப்பர், PU, EVA போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது. இது முழு ஷூத் தொழிலுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது
எரிபொருள், பெட்ரோகெமிக்கல் சார்ந்த அனைத்து துறையும் இந்த ஈரான் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இதே பிரச்சனை தான்.
தமிழ்நாடு
தமிழ்நாடு இந்தியாவில் காலணித் தயாரிப்பு துறையில் முக்கிய மையமாக திகழ்கிறது. குறிப்பாக தோல் மற்றும் ஏற்றுமதி காலணிகள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது.
அம்பூர் – வாணியம்பாடி – ராணிப்பேட்டை பகுதிகள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோல் மற்றும் காலணி உற்பத்தி மையமாக உள்ளது. ஏற்றுமதிக்கான காலணிகள் அதிக அளவில் இங்கு தயாரிக்கப்படுகின்றன. சென்னை அருகே உள்ள தொழிற்பேட்டைகளில் பல பெரிய நிறுவனங்கள் காலணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் பெரம்பலூரில் இருக்கும் கார்க்ஸ் செருப்பு தொழிற்சாலையும் சில பாதிப்புகள் எதிர்கொண்டு வருகிறது. ராணிப்போட்டையில் தோல் அடிப்படையிலான காலணிகள் தயாரிக்கப்படும் நிலையில் பெரம்பலூரில் பாலியூரிதீன் (PU) அடிப்படையிலான செருப்புகள் தயாரிக்கப்படுகிறது.
ஏற்றுமதி
உற்பத்தி அளவில் பல்வேறு பிரச்சனைகள் பெரும் சுமையாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுமதி செலவுகளும் அதிகரித்துள்ளது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் மட்டும் அல்லாம் பாப் அல் மண்டப் வழித்தடத்தில் சரக்கு கப்பல் போகுவரத்து அச்சம் அதிகமாக இருக்கும் வேளையில் சரக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது, இதேபோல் கப்பல் மீதான தாக்குதல் அச்சம் காரணமாக இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகரித்துள்ளது.
உதாரணமாக 300 டாலராக இருந்த ஏற்றுமதி கட்டணம் பல வழித்தட்டத்தில் 8500 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நீண்ட தூர பயணம் காரணமாக 60 நாட்கள் வரையில் கூடுதல் டெலிவரி காலம் தேவைப்படுகிறது. இதோடு மூலப்பொருட்கள் விலை உயர்வு, சப்ளை தட்டுப்பாடு இணைந்து இந்தியாவின் ஷூ மற்றும் காலணி தொழில்களை பெரிதும் பாதித்துள்ளது.
கிட்டத்தட்ட இதே பாதிப்பு தான் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக எரிபொருள் தேவையை இறக்குமதி மூலம் தீர்க்கும் அனைத்து நாடுகளும் இந்த பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் போர் நிறுத்தம் விரைவில் சப்ளை அதிகரித்து மற்றும் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/iran-war-fallout-india-s-footwear-industry-hit-hard-by-supply-chain-crisis-rising-costs-ceasefi-788187.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
