
International
oi-Velmurugan P
இஸ்லாமாபாத்: ஈரான் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ‘செரீனா ஹோட்டல்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டல் பேச்சுவார்த்தைக்கு ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா – ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயன்று வருகின்றன. அந்த பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில் இன்று நடந்து வருகிறது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்பட மூத்த அமெரிக்க தலைவர்கள் வந்துள்ளார்கள். இதேபோல் ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களும் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இதையடுத்து பேச்சுவார்தை காரணமாக இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர் மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் வருகை தந்த காரணத்தால் நகரின் கடைகள் மற்றும் அலுவலகங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கிறது.
‘ரெட் சோன்’ பகுதி துண்டிப்பு
அத்துடன் பாகிஸ்தான் துணை ராணுவப் படை மற்றும் ராணுவத்தினர் உட்பட ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். அரசு அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ள ‘ரெட் சோன்’ பகுதி பொதுமக்களிடம் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
செரீனா ஹோட்டல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
2008-ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஹோட்டலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த ஹோட்டல் ஒரு விசித்திரமான தேர்வாகவே பார்க்கப்படுகிறது ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் இதை ஒரு ‘சிறந்த பாதுகாப்பு அமைப்பு’ கொண்ட இடமாகக் கருதுகின்றனர். இந்த ஹோட்டலின் பாதுகாப்புப் பணியாளர்கள் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரிகள். அவர்கள் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
புகழ் பெற்ற செரீனா ஹோட்டலின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் பிரதான கட்டிடத்தில் இருந்து தகுந்த தூரத்தில் உள்ளன. மேலும், பிரதமரின் இல்லம், நாடாளுமன்றம் போன்ற முக்கியமான இடங்களுக்கு இங்கிருந்து எளிதாகச் செல்ல முடியும். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் 400-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கா மற்றும் ஈரான் குழுக்கள் தங்குவதற்கு இது மிகவும் வசதியானது என்று பாகிஸ்தான் நம்புகிறது.
இந்த ஓட்டல் இது பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகளைக் கொண்டது மட்டுமல்லாமல், அரசு பாதுகாப்பு அமைப்புகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் உள்ளது. உலகமே உற்று நோக்கும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, ஒரு சொகுசு ஹோட்டல் ராணுவக் கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistans-serena-hotel-how-was-it-chosen-for-the-iran-us-talks-789143.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
