
International
oi-Halley Karthik
கேப்டவுன்: இன்று நாம் பயன்படுத்தும் மொத்த தங்கத்தில், சுமார் 40% தென்னாப்பிரிக்காவிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் இன்னும் அதிக அளவில் தங்கம் இருக்கிறது என்றாலும், அதை எடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட அளவுக்கு நிகராக தங்கம் இருந்தாலும், அதை வெளியில் எடுப்பதில் பெரிய சிக்கல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சி
தென்னாப்பிரிக்காவின் ‘விட்வாட்டர்ஸ்ராண்ட் பேசின்’ எனும் பகுதியில் கடந்த 1886ம் ஆண்டு முதன் முதலில் தங்கம் கண்டெடுக்கப்பட்டது. தங்க உற்பத்தில் வரலாற்றில் இந்த ஆண்டு மிக முக்கியமானதாகும். இதன் பின்னர்தான் மனித குலம் அதிக அளவில் தங்கத்தை தோண்டி எடுக்க தொடங்கியது. இப்படித்தான் ஜோகன்னஸ்பர்க் நகரம் உருவானது. அன்று தொடங்கி இன்று வரை மொத்தம் 1.6 பில்லியன் அவுன்ஸ் அளவுக்கு தங்கத்தை தோண்டி எடுத்திருக்கிறோம். இது மனித குலம் இதுவரை தோண்டி எடுத்த மொத்த தங்கத்தில் சுமார் 40% ஆகும்.
இந்த பகுதியில் இன்னும் 1 பில்லியன் அவுன்ஸ் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை வெட்டி எடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காரணம் என்ன?
இந்த தங்க சுரங்கம் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கிறது. அந்த காலத்தில், எரிமலை பாறைகளை அரித்து ஓடிய ஆறுகள், தங்க துகள்களை ஏரி படுகைகளில் கொண்டு வந்து சேர்த்திருந்தன. காலப்போக்கில், பாறைகள் உருவாகி இந்த பகுதி தங்க வயலாக மாறியது. இந்த பகுதி 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருந்தாலும், இங்கிருக்கும் தங்கத்தின் வயது 25 கோடி ஆண்டுகள்தான். தற்போது மேற்பரப்பில் உள்ள தங்கத்தை முழுவதுமாக நாம் தோண்டி எடுத்துவிட்டோம்.
அதிகரிக்கும் ஆழம்
2.5-4 கி.மீ ஆழம் வரை சுரங்கங்களை தோண்டி வைத்திருக்கிறோம். இவ்வளவு ஆழத்தில் பாறைகள் சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும். எனவே இங்கு பணியாற்ற சூப்பர் கூலிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைவதாலும், மேலும் ஆழமாக சுரங்கம் போவதாலும் அங்கு வேலை பார்ப்பது கஷ்டமான காரியமாக மாறியிருக்கிறது. செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இப்படியே போனால் கட்டுப்படி ஆகாது என்பதை உணர்ந்த சுரங்க நிறுவனங்கள் ஜகா வாங்கியிருக்கின்றன.
மற்ற நாடுகளில் உற்பத்தி
அதேபோல சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மேற்பரப்பிலேயே அதிக அளவுக்கு தங்கம் கிடைக்கிறது. எனவே, அங்கு சுரங்க பணிகள் அதிகரித்திருக்கின்றன. இதன் காரணமாக தங்கம் உற்பத்தியில் தென்னாப்பிரிக்கா 4வது இடத்திற்கு சென்றிருக்கிறது.
இதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. அதாவது தங்கமாகவே இருந்தாலும் கூட, தேவைப்படும்போது, கைக்கு எட்டும் இடத்தில் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. இருப்பினும் இவ்வளவு பறைய சுரங்கம் மூடப்படக்கூடாது என்பதால் யுரேனியம் தோண்டும் பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/40-of-worlds-gold-came-from-here-but-no-more-789111.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
