
India
oi-Hema Vandhana
காந்தி நகர்: குஜராத்தில் கல்லூரி மாணவிகள் இருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஊசிகள் மற்றும் விஷ பாட்டில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம் உயிர்கள் பறிபோனதற்கான மர்மக் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. இது குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் டிண்டோலி பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஆத்மியா சன்ஸ்கர்தாம் சுவாமி நாராயண் கோயில்… இந்த வளாகத்தில் உள்ள பொதுக் கழிவறையில் இரண்டு பெண்கள் மயங்கிய நிலையில் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது..

குஜராத் தோழிகள்
அவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்..
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவிகள் இருவரும் உத்னா சிட்டிசன் காலேஜில் படித்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.. அவர்களின் பெயர்கள் ரோஷ்னி சிர்சாத் (18) மற்றும் ஜோத்ஸ்னா சவுத்ரி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது..
கோயில் வாசலில் டூவீலர்
இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.. சம்பவத்தன்று வழக்கம்போல தங்களது வீடுகளில் இருந்து கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டுள்ளனர்.. ஆனால் மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் பதற்றமடைந்த பெற்றோர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.. மாணவிகளின் செல்போன் சிக்னல் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது அது கோயில் வளாகத்தைக் காட்டியது..
பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாணவிகள் வந்த டூ வீலர் நிறுத்தப்பட்டிருந்தது.. உடனே கோயில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இருவரும் கோயில் வளாகத்தில் உள்ள பொதுக் கழிவறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது.. கழிவறைக் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர்..
ஊசியுடன் குளியலறையில்
அப்போது மாணவிகள் இருவரும் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. சம்பவ இடத்தில் இருந்து ஊசிகள் மற்றும் மூன்று விஷத்தன்மை கொண்ட மயக்க மருந்து பாட்டில்களைப் போலீசார் கைப்பற்றினர்..
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது ஒரு திட்டமிடப்பட்ட தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது.. குறிப்பாக அந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக கூகுள் மற்றும் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது..
வலி இல்லாமல் தற்கொலை
அதில் “வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி?” மற்றும் “தற்கொலைக்கு எளிதான வழிகள் என்ன?” என்பது குறித்து தேடியுள்ளனர்.. இணையதளத்தில் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்தே அவர்கள் மருந்துகளை வாங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.. அவர்கள் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது குறித்து எந்தக் கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை..
AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலியற்ற மரணம் குறித்து தேடிய தோழிகள், இணையதள தகவல்களை வைத்தே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. 2 பெண்களை பறி கொடுத்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது..!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/two-friends-entered-the-restroom-with-needles-is-this-what-they-searched-on-google-unbelievable-i-779769.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
