
International
oi-Shyamsundar I
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் கலைந்தபாடில்லை. சொல்லப்போனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய உரை, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று ஆவேசமாக உரையாற்றிய அவர், இஸ்ரேலின் ராணுவ பலம் மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து வெளியிட்ட தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன.

“மெஸையாவின் வருகை வரை ஓயமாட்டோம்!”
இஸ்ரேல் ஒரு ‘எழுச்சி பெறும் வல்லரசு’ என்று முழங்கிய நெதன்யாகு, “நாங்கள் ‘புனித சாம்ராஜ்யத்தை’ எட்டுவோம்; மெஸையாவின் (Messiah) வருகை வரை இஸ்ரேல் தன் பயணத்தைத் தொடரும்” என்று ஆன்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிரடி காட்டினார். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் இதுவரை கண்டிராத வெற்றிகளைப் பெற்று வருவதாகவும், இந்த ராணுவ நடவடிக்கை மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைத்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பெஞ்சமின் நெதன்யாகு இங்கே குறிப்பிடும் ‘மெஸையா’ (Messiah) என்பது யூத மத நம்பிக்கையின்படி (Judaism), உலகிற்கு விமோசனம் அளிக்க இறைவனால் அனுப்பப்படும் ஒரு புனிதத் தூதரைக் குறிக்கிறது. யூதர்களின் புனித நூலான தோராவில் (Torah), காலத்தின் இறுதியில் தாவீது ராஜாவின் (King David) வம்சாவளியில் ஒரு தலைவர் தோன்றுவார் என்றும், அவர் சிதறிக்கிடக்கும் யூதர்களை மீண்டும் இஸ்ரேல் மண்ணிற்கு அழைத்து வந்து, ஜெருசலேமில் மூன்றாவது திருக்கோயிலை (Third Temple) கட்டி, உலகில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவார் என்றும் நம்பப்படுகிறது.
நெதன்யாகு போன்ற வலதுசாரி மற்றும் மதவாத அரசியல் தலைவர்கள், இஸ்ரேல் தற்போது சந்தித்து வரும் போர்களையும் வெற்றிகளையும் இந்த மெஸையாவின் வருகைக்கான முன்னோட்டமாகவே சித்திரிக்கின்றனர். அதாவது, இஸ்ரேல் ஒரு பிராந்திய வல்லரசாக உருவெடுத்து, தன் எதிரிகளை அழிப்பதன் மூலம் அந்தப் புனிதத் தூதரின் வருகைக்கான ஆன்மீக மற்றும் அரசியல் களம் தயாராகி வருவதாக அவர் உணர்த்துகிறார். மதச்சார்பற்ற அரசியலைத் தாண்டி, ஒரு தீர்க்கதரிசனப் போர் (Prophetic War) நடப்பதாகத் தனது ஆதரவாளர்களிடம் காட்டுவதற்காகவே அவர் இத்தகைய தீவிரமான மதக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நேரடி மிரட்டல்!
மேலும்.. வழக்கமான அரசியல் நாகரிகங்களைத் தாண்டி, தனிப்பட்ட ரீதியிலான எச்சரிக்கைகளையும் இந்த முறை நெதன்யாகு முன்வைத்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் ஆகியோரை நேரடியாகக் குறிப்பிட்ட அவர்:
“அவர்களுக்கு நான் ‘லைஃப் இன்சூரன்ஸ்’ (உயிர் காப்பீடு) வழங்கப்போவதில்லை. யாருடைய உயிருக்கும் இங்கு கேரண்டி கிடையாது”
என்று பகிரங்கமாக எச்சரித்தார். இது அந்தத் தலைவர்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானில் ஆட்சி மாற்றம்?
ஈரானின் தற்போதைய அரசுக்கு முடிவு கட்டும் சூழலை உருவாக்குவதே இஸ்ரேலின் நோக்கம் என்று குறிப்பிட்ட நெதன்யாகு, “இறுதி முடிவை எடுக்க வேண்டியது ஈரான் நாட்டு மக்கள்தான். ஆனால், அதற்கான களத்தை இஸ்ரேல் அமைக்கும்” என்றார்.
இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான போக்கு, வல்லரசு நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதன்யாகுவின் இந்த ‘மெஸையா’ பேச்சு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான முன்னெடுப்புகள், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் மத்திய கிழக்கை மேலும் ஒரு பெரும் போரை நோக்கித் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/our-messaih-is-arriving-israel-pm-benjamin-netanyahu-announces-for-first-time-amid-iran-war-781051.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
