
Business
oi-Prasanna Venkatesh
டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் தலைவர் என்.சந்திரசேகரன் முக்கியமான நெருக்கடியில் உள்ளார். டாடா குழுமத்தில் புதிதாக துவங்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வர்த்தகங்கள் பெரிய அளவிலான நஷ்டங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இவருடைய 3வது பதவிக்கால நீட்டிப்பு பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
இந்த நிலையில் இழப்புகளை எதிர்கொண்டு வரும் நிறுவனங்களை லாபத்தை அடையும் பாதைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் டாடா டிர்ஸ்ட் அமைப்பிடம் என்.சந்திரசேகரன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் ஏர் இந்தியா தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, டாடா குழுமத்தின் புதிதாக துவக்கப்பட்ட வர்த்தகத்தில் 2026ஆம் நிதியாண்டில் சுமார் 29000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் ஏர் இந்தியா மட்டும் 20000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொள்ளும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நடத்திய டவுன் ஹால் மீட்டிங்-ல் டாடா சன்ஸ்-ன் தலைவர் என்.சந்திரசேகரன் முக்கியமான தகவல்களை ஏர் இந்தியா ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப் பழமையான விமான நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தையும், தொடர்ச்சியான செயல்பாட்டுப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறது என தெரிவித்தார். இருப்பினும், டாடா குழுமம் ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மேம்படுத்தும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குருகிராம் நகரில் உள்ள ஏர் இந்தியா குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊழியர் சந்திப்பில் பேசிய சந்திரசேகரன், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் முக்கிய தலைமை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை இந்த மோசமான நிலையில் இருந்து மீட்டு கொண்டு வர என். சந்திரசேகரன், ஊழியர்களுக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
முதலில், ஒவ்வொரு ஊழியரும் அதாவது தலைமை பொறுப்பில் இருக்கும் மூத்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையில் அனைவரும் நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டாவதாக, பயணிகளுக்கு வழங்கும் சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். பேர்டிங் பாஸ் கொடுப்பதில் துவங்கி பேகேஜ் கிளியரென்ஸ் வரையில்.
மூன்றாவதாக, நிறுவனத்தின் உண்மையான சூழலைப் புரிந்துகொண்டு, யதார்த்த நிலையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அறிவுரைகள், ஏர் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நஷ்டம் மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளன.
டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இரண்டின் தலைவருமான சந்திரசேகரன், டாடா குழுமம் ஏர் இந்தியா வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு முழுமையான உறுதியுடன் உள்ளது என்று நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
சிஇஓ ராஜினாமா
இந்த ஊழியர் சந்திப்பு, ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் கேம்பெல் வில்சன் கடந்த வாரம் ராஜினாமா செய்த நிலையில் நடைபெற்றதுள்ளது. ஏப்ரல் 7 அன்று ராஜினாமாவை அறிவித்த கேம்பெல் வில்சன், டாடா குழுமத்துடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்தார். அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/tata-air-india-in-trouble-n-chandrasekaran-warns-employees-urges-cost-control-after-ceo-campbell-w-789007.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
