
Tamilnadu
oi-Vishnupriya R
லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் துணிகளை துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பெண்களுடன் கலகலப்பாக பேசினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் இன்றையதினம் லால்குடி அடுத்துள்ள கல்லக்குடி குளத்தில் பெண்களின் ஆடைகளை துவைத்து கொடுத்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் நடிகர் மன்சூர் அலிகான்.
அப்போது குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு துணி மூட்டையை குளத்தில் போட்டார், உடனே அங்கிருந்த பெண்ணிடம் சோப்பு கேட்டார். பின்னர் சோப்பு போட்டு அடித்து துவைத்து கொடுத்தார். என்ன இவ்வளவு அழுக்கு இருக்கு என கேட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான் களமிறங்கினார். திண்டுக்கல்லில் ஒரு பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக அவர் பேசுவது அவர்களை வெகுவாக ஈர்த்தது. சைக்கிளில் ரவுண்டு அடித்தபடியே ஓட்டு கேட்டார். பிறகு கையில் கிளவுஸ் கூட இல்லாமல் தெருவை சுத்தம் செய்து குப்பையை அள்ளினார். பிறகு அந்த குப்பை வண்டியை ஓட்டி கொண்டு சென்றார்.
குப்பையை கொட்டியதுடன் சும்மாவிட்டாரா, அப்போதுதான் வேலைக்கு வந்த துப்புரவு தொழிலாளர்களிடம் ஏன் வேலைக்கு இவ்ளோ லேட்டா வர்றீங்க? என்று கேள்வியும் எழுப்பினார். அம்மிக்கல்லில் சட்னி அரைத்து கொடுத்து பெண்களுக்கு உதவினார். அந்த வழியாக கீரை விற்கும் பெண்கள் சென்றாலோ, அல்லது காய்கறிகள் விற்கும் பாட்டிகள் சென்றாலோ, மனசார உரையாடினார்.
காய்கறி விற்ற பாட்டியிடம் சென்ற மன்சூர் அலிகான், “பாட்டி, இந்த முருங்கைக்காய் என்ன விலை?” என்றார். பாட்டியும் 4 காய் 10 ரூபாய் என்றார். “என்னது.. 10 ரூபாய்க்கு நாலு காய்களா? எங்க ஊர்ல ஒன்னுதான் தராங்க பாட்டி என்றார்.
கையில் ஒரு கம்பை வைத்து கொண்டு, “எனக்கு மட்டும் ஓட்டு போடவில்லைன்னா இந்த கம்பாலேயே மண்டையை ஒடைப்பேன் என்று உரிமையாகவும் ஜாலியாகவும் சொன்னார். யாராவது செல்பி எடுக்க வந்தால், “எவ்ளோ செல்பி வேணுமோ எடுத்துக்குங்க.. ஆனா ஓட்டு மட்டும் எனக்கு போட்டுடனும். இல்லேன்னா வெட்டிடுவேன் என்று தெரிவித்தார்.
சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் மன்சூர் அலிகான், மக்கள் பிரதிநிதியாக துடித்து வருகிறார். அந்த வகையில் இந்த முறை லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு முறை கல்லக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்தார். உடனே பதறிய போலீஸார், என்னாச்சு என கேட்க, கருணாநிதி நினைவு வந்தது, அதான் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன் என்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/mansoor-ali-khan-campaigns-uniquely-in-lalgudi-washes-clothes-to-seek-votes-788491.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
