
India
oi-Vigneshkumar
அமராவதி: ஆந்திா மாநிலத்தில் நிம்மதியாகத் தூங்கச் சென்ற ஒரு குடும்பமே அழிந்துள்ளது. அவர்கள் செய்த ஒரு சிறிய தவறே ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்.. இதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நாம் தவறுதலாகச் செய்யும் ஒரு சிறிய விஷயம் கூட எதிர்பார்க்காத மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் உயிரே போகும் அளவுக்குக் கூட நிலைமை மோசமாகலாம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது. அங்கு அன்னமய்யா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

குடும்பமே போச்சு
அதாவது இரவு முழுவதும் மோட்டர் பைக் என்ஜினை ஆன் செய்து வைத்துள்ளனர். அந்த பைக்கில் இருந்து வந்த கரும்புகையை சுவாசித்ததே மரணத்திற்குக் காரணம் என போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பங்கனூர் நகரில் நேற்று இரவு நடந்துள்ளது. பைக்கை ஆன் செய்து படுத்த ஒரே காரணத்தினால் இன்று அந்த ஒட்டுமொத்த குடும்பமும் அழிந்து போய் இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் அந்த ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்தது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 70 வயது தாத்தா ராமச்சந்திரய்யா, அவரது 8 வயது இரட்டை கொள்ளப் பேத்திகள் சரிதா மற்றும் சந்தனா, அத்துடன் 15 வயது பேரன் கார்த்திக் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் முரளியின் மோட்டர் பைக்கில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பைக்கின் பிஸ்டனை மாற்றிச் சர்வீஸ் செய்துள்ளார். இருப்பினும், சில சிக்கல் இருந்ததால் நைட் முழுக்க பைக்கை ஆஃப் செய்ய வேண்டாம் என்றும் ஆனிலேயே வைத்திருக்கும்படியும் மெக்கானிக் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிறிய தவறு
மெக்கானிக் சொன்னதைக் கேட்டு முரளி அப்படியே செய்துள்ளார். மோட்டார் சைக்கிளை இரவு முழுவதும் ஆன் செய்தே வைத்துள்ளார். இருப்பினும், அவர் பைக்கை வீட்டுக்கு வெளியே வைத்து ஆன் செய்யவில்லை. மாறாக வீட்டிற்குள் பைக்கை நிறுத்தி, ஜன்னல்கள் அனைத்தையும் மூடியும் இருக்கிறார். அதன் பிறகே அவர் பைக்கை இயங்கியுள்ளார். இதுவே 4 பேரின் உயிரைப் பறித்தது.
உயிர் தப்பினர்
அதேநேரம் முரளியும் அவரது மனைவி ரேவதியும் மொட்டை மாடியில் உறங்கச் சென்றதால் உயிர் தப்பினர். ஆனால், அவரது தந்தை ராமச்சந்திரய்யா, மகன் கார்த்திக், இரட்டைக் குழந்தைகளான சரிதா, சந்தனா ஆகியோர் வீட்டிற்குள் உறங்கியுள்ளனர். கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், பைக்கிலிருந்து வெளியான விஷப்புகை வீடு முழுவதும் நிரம்பியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நால்வரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணையையும் தொடங்கினர்.
உயிரிழப்பு
முதற்கட்ட விசாரணையில் மூடிய வீட்டிற்குள் பரவிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.. இச்சம்பவம் பங்கனூர் நகர மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/andhra-pradesh-bike-fume-issue-4-family-members-three-kids-and-their-grand-father-lost-their-life-781549.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
