
India
-Vigneshkumar
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக நடந்த ரேஸ் பங்கேற்ற 17 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போய் உள்ளது. அந்த சிறுவன் சாலையில் சென்று கொண்டு இருந்த பைக் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டரில் மோதியது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
இந்த காலத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கி, அதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழல்களில் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

ரேஸ் விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சட்டவிரோத பைக் ரேஸில் 17 வயது சிறுவன் பங்கேற்றுள்ளான். 12ம் வகுப்பு படித்த அந்த சிறுவன் சாலையில் பைக் ரேஸ் போன நிலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினான். இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த அவர், ஸ்கூட்டர் மீது மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
என்ன நடந்தது!
நைத்திக் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ரக பைக்கில் ரேஸ் போய் இருக்கிறார். சக பைக்கர்களுடன் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தார். பூங்காவின் 5ஆம் கேட் அருகே சென்று கொண்டு இருந்தபோது சாலையில் ஏதோ ஒன்றின் மீது அவரது பைக் லேசாக பட்டுள்ளது. அதிவேகமாக பைக்கை ஓட்டியதால் இந்த லேசான உரசல் காரணமாகவே அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த பைக் முன்னால் சென்ற ஹோண்டா ஆக்டிவா மீது மோதியது. பிறகு சென்டர் மீடியத்தில் விழுந்ததில் குமாருக்குத் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.
வீடியோ
இந்த விபத்தில் சிக்கிய ஆக்டிவா இருசக்கர வாகனம் சாலையின் வலதுபுறமாக இழுத்துச் செல்லப்பட்டு, அதிவேகமாக வந்த மற்றொரு கவாஸாகி நின்ஜா பைக் மீது மோதியது. மணிக்கு சுமார் 90 கி.மீ வேகத்தில் வந்த நின்ஜா ஓட்டுநர், விபத்தின்போது தனது பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 360 டிகிரி ஆக்ஷன் கேமராவை சரிசெய்தபடி இருந்தார். அந்தக் கேமரா இந்த கோர விபத்தை அப்படியே பதிவு செய்தது. நின்ஜாவுடன் வந்த மற்றொரு பைக்கரும் ஆக்டிவாவுடன் மோதி கீழே விழுந்தது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு உடை கூட இல்லை
விபத்தில் உயிரிழந்த நைத்திக் குமாரின் தந்தை உத்தரப் பிரதேச மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஒருவரின் மகனாவர். விபத்து நடந்தவுடன் படுகாயமடைந்த நைத்திக் குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். விபத்தின்போது, நைத்திக் குமார் பாதுகாப்பு உடைகள் எதையும் அணியாமல் வெறும் சட்டை, ஜீன்ஸ் மற்றும் தலைக்கவசம் மட்டுமே அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த ஆக்டிவா ஓட்டுநர் நலமாக இருக்க வேண்டும் என்றே பதிவிட்டு வந்தனர். இவர்களின் அலட்சியத்தால் சாலையில் அமைதியாகச் சென்று கொண்டு இருந்த ஆக்டிவா ஓட்டுநர் பாதிக்கப்படுவதாக விமர்சித்தனர். இதற்கிடையே ஆக்டிவா ஓட்டுநர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா மற்றும் மற்றொரு பைக்கர் கிருஷ்ணா சிங் ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் விசாரணை
மறைந்த நைத்திக் குமாரின் குடும்பத்தினர், இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக தங்கள் பூர்வீக கிராமமான பாராபங்கிக்கு அவரது உடலை எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, விபத்துக்கான சரியான காரணம் தெரிய வரும் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/lucknow-teen-naitik-kumar-lost-his-life-in-royal-enfield-crash-with-activa-during-street-racing-011-781877.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
