
International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்கா கோரி வருகிறது. ஆனால் ஈரான் இதில் இன்னும் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான் ஈரானின் இந்த தயக்கத்திற்கு, கடலில் கண்ணிவெடி வைத்த இடத்தை அந்த நாடால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடுத்தன. இந்த தாக்குதலையடுத்து பதிலடி நடவடிக்கைகளில் ஒன்றாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிறிய படகுகளை கொண்டு சென்று கண்ணி வெடிகளையும் வைத்தது.

தற்காலிக போர் நிறுத்தம்
அந்த வழியாக கப்பல்கள் ஏதேனும் கடக்க முற்பட்டால், இந்த கண்ணி வெடிகளில் சிக்கி சேதம் அடையும் நோக்கத்தில் ஈரான் இப்படி செய்து வைத்து இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மோதலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தற்காலிக நிவாரணம் கிடைத்தது. ஈரான் – அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு இருந்த நிலையில், அமெரிக்கா முக்கியமான நிபந்தனையாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று வைத்து இருந்தது.
உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுவதால், இங்கு ஏற்பட்ட போக்குவரத்து தடை சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கிய போதிலும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை. மாறாக கப்பல்கள் கடக்க மாற்று வழியை ஈரான் அறிவித்தது.
கண்ணி வெடிகள் எங்கு இருக்கின்றன?
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் அதை அமெரிக்காவே திறக்கும் என்றும் ஈரானுக்கு டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஆனால் இதற்கு ஈரான் தயக்கம் காட்டி வந்தது. இந்த நிலையில் தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்க தயக்கம் காட்டுவதற்கு பின்னால், அங்கு கண்ணி வெடிகள் எங்கெங்கு உள்ளன என்று கூட டிராக் செய்ய முடியாத நிலை இருப்பதே ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பான தகவலை அமெரிக்காவில் உள்ள பிரபலமான செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஈரான் வைத்துள்ள சில கண்ணி வெடிகள் அவை பதிக்கப்பட்ட இடங்களில் நிலையாக இல்லாமல், நீரின் ஓட்டத்தால் மிதந்து நகரக்கூடிய வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதன் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிவது கடினமாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் இந்த கண்ணிவெடிகள் திட்டமிடாமல், சீரற்ற முறையில் ஈரான் பதித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?
இதற்கிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே இன்று பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவினர் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கியமான நிபந்தனையாக உள்ளது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்பும் எச்சரித்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-unable-to-fully-reopen-the-strait-of-hormuz-becuse-it-lost-track-of-mines-789037.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


