
International
-Vigneshkumar
டெல்லி: மத்திய கிழக்கு மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளன. இதைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தங்கள் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளது. இருந்தபோதிலும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச மார்கெட்டில் சரியவில்லை. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்!
சர்வதேச எரிசக்தி ஏஜென்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பரிய எண்ணெய் கையிருப்பை விடுவித்துள்ள போதிலும் சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை குறையவில்லை. மாறாகக் கடந்த வியாழக்கிழமை கூட உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் நீடித்த விநியோகத் தடங்கல் குறித்த அச்சங்கள் எந்தளவுக்கு அதிகமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

கையிருப்பு ரிலீஸ்
கடந்த வியாழக்கிழமை, ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 7%க்கும் மேல் உயர்ந்து, மீண்டும் ஒரு பேரல் $100ஐ நெருங்கியது. ஒரு நாள் முன்னதாக இது ஒரு பேரல் $94 ஆக வர்த்தகமானது. இந்த விலை ஏற்றம் சந்தையில் நிலவும் பதற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 32 நாடுகள் கொண்ட IEA கூட்டமைப்பு, சர்வதேச மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை தங்கள் கையிருப்பில் இருந்து விடுவிக்க ஒப்புக்கொண்ட போதிலும் இந்த விலை உயர்வு நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா 172 மில்லியன் பேரல்களை விடுவித்தது. இந்த ஏஜென்சி இதுவரை ரிலீஸ் செய்த கையிருப்புகளில் இதுதான் மிகப் பெரியது. இருப்பினும், சந்தைகள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலிலும், உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயமும் நிலைமையை மோசமானதாக மாற்றியுள்ளது.
ஏன் குறையல
இந்த போர் சூழலில் கச்சா எண்ணெய் விநியோகத் தடங்கல் குறித்த கவலைகள் உச்சத்தில் இருக்கிறது. இதுபோல கையிருப்பை விடுவிப்பதன் மூலம் இந்த அச்சத்தை ஈடுசெய்ய முடியாது என எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் போர் ஏற்கனவே சுமார் 200 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோக இழப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கையிருப்பு என்பது ஏற்கனவே உலக நாடுகளிடம் இருப்பது. இப்போது அதில் பிரச்சினையே இல்லை. உற்பத்தி செய்யப்படும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து கச்சா எண்ணெய் வெளியே வருவது தடைப்பட்டுள்ளது. அதுவே இப்போது மார்கெட்டிற்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த சப்ளை சிக்கல் எப்போது சீராகும் எனத் தெரியவில்லை. இதன் காரணமாகவே கையிருப்பு ரிலீஸ் ஆனாலும் கூட அது சந்தை பதற்றத்தைக் குறைக்கவே.. விலை சரிவுக்கோ வழிவகுக்கவில்லை.
பிரச்சினையைத் தீர்க்காது
இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேலும், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாக டேங்கர்கள் நகர முடியாவிட்டால், இருப்பிலிருந்து பேரல்களை விடுவிப்பது சிக்கலைத் தீர்க்க சிறிதும் உதவாது. அது தள்ளிப் போட மட்டுமே செய்யும்” என்றார். சமீபத்தில் தான் அந்த பகுதியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டன. வளைகுடாவில் கப்பல் போக்குவரத்துக்கு உள்ள அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இது இருக்கிறது. அதேபோல ஈராக் கடல் பகுதியில் இரண்டு டேங்கர்கள் தாக்கப்பட்டன. இதனால் பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே, நெருக்கடி காரணமாக எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக ஈராக் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு அச்சம் காரணமாக குவைத் மற்றும் சவுதி அரேபியாவும் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
உலக பொருளாதாரம்
இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என்றும் இது ஒரு நீண்ட காலப் போராக மாறக்கூடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய ஒரு நீண்டகாலப் போரின் சாத்தியக்கூறுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஈரான் புரட்சிப் படையின் தளபதிக்கு ஆலோசகரான அலி ஃபடாவி வலியுறுத்தினார்.
மோதல் தீவிரமடைந்தால் கச்சா எண்ணெய் விலைகள் இதுவரை இல்லாத வகையில் உயரும் என்றும் ஈரானின் ராணுவம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் ராணுவக் கமெண்ட் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபாகரி, “ஒரு பேரல் $200 என்ற ரேட்டிற்கும் போகலாம்.. எதற்கும் தயாராக இருங்கள்.. ஏனெனில் நீங்கள் (அமெரிக்கா- இஸ்ரேல்) பிராந்திய பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டீர்கள். எண்ணெய் விலை அதைப் பொறுத்தே இருக்கிறது” என்றார்.
ரேட் நிரந்தரமாக உயரும்
இந்த மோதல் தொடர்ந்தால், ஒரு பேரல் ரேட் என்பது நிரந்தரமாக $90 முதல் $120 என இருந்துவிடக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் இருந்த பல்வேறு சிக்கல்களும் மெல்ல சீரடைந்து உலக பொருளாதாரம் இயல்பை நோக்கி வந்து கொண்டு இருந்தபோதுதான் மீண்டும் போர் வெடித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/why-oil-prices-rising-even-after-iea-agreed-to-release-400-millions-of-barrel-emergency-reserve-011-780669.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
