
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் வென்றுள்ள நிலையில், அவரின் மனைவி சாருலதா வெற்றியின் போது பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் எப்போதெல்லாம் உடைந்து விழுகிறாரோ, அப்போதெல்லாம் தாங்கி நிற்கும் தூண் போல் சாருலதா இருந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்களின் காதல் கதை ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது சஞ்சு சாம்சன் 20 வயது தான். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்போது தொடங்கிய போராட்டம் சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரிலும் கூட சஞ்சு சாம்சனுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த 3 வாய்ப்புகளிலும் சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவே பேசப் போகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 97 ரன்களும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 89 ரன்களும் ஒவ்வொரு ரன்கனின் நினைவிலும் இருக்கப் போகிறது.
டி20 உலகக்கோப்பையை வென்ற பின் இந்திய வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் தான் அதிகமாக கொண்டாடினார். ஆனால் சஞ்சு சாம்சனின் மனைவி சாருலதா பெயரளவில் மைதானத்திற்கு வந்துவிட்டு, மொத்த வெளிச்சத்தையும் சஞ்சு சாம்சனிடம் கொடுத்தார். அது சஞ்சு சாம்சனுக்கான தருணம் என்று விலகி நின்றார். அதுவே சஞ்சு சாம்சன் – சாருலதா இணையை இன்னும் ஒரு படி மேல் கொண்டு செல்கிறது.
ஏனென்றால் சஞ்சு சாம்சன் கிரிக்கெட்டில் சாதிக்க போராடிய போதெல்லாம் உடனிருந்த நபர் சாருலதா. இவர்களின் காதல் கதை கல்லூரி காலத்திலேயே தொடங்கிவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள இவானியோஸ் கல்லூரியில் சஞ்சு சாம்சன் படித்திருந்தார். அதே கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிக்க சாருலதா சேர்ந்துள்ளார். அப்போதே சஞ்சு சாம்சன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஆடி வந்தவர்.
இதனால் சஞ்சு சாம்சன் கல்லூரியில் கொஞ்சம் கூடுதல் பிரபலம். இதற்காக சாருலதா வந்து சஞ்சு சாம்சனிடம் பேச முயற்சிக்கவில்லை. அப்போது பிரபலமாக இருந்த ஃபேஸ்புக் மூலமாக சஞ்சு சாம்சன் ஒரு ரெக்வெஸ்ட்டை சாருலதாவுக்கு கொடுத்துள்ளார். அங்கு தொடங்கியது தான் இவர்களின் நட்பு.. பின்னர் சேட்டிங்கில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி இருக்கிறது.
ஆனால் சஞ்சு சாம்சன் – சாருலதா இணை பேசுவதோ, பழகுவதோடு யாருக்கும் தெரியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதன்பின் தங்களின் காதல் குறித்து இரு குடும்பத்தினரிடமும் கூறி இருக்கின்றனர். சஞ்சு சாம்சன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். சாருலதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்.
ஆனால் இரு தரப்பும் தங்களின் மதத்திற்கு மாற கோரி எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. 2018ஆம் ஆண்டு எளிதாக நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் சூழ இருவரும் கரம் பிடித்தனர். அதன்பின் சஞ்சு சாம்சனின் மனைவி என்ற பந்தாவை சாருலதா எங்கேயும் காட்டியதே இல்லை. சஞ்சு சாம்சன் விளையாடும் போட்டிகளை கூட அவ்வளவாக நேரில் வந்து பார்க்க மாட்டார்.
தனக்கான அடையாளத்தை சாருலதா உருவாக்க விரும்பினார். லயோலா கல்லூரியில் மனித வள மேம்பாட்டு பிரிவில் உயர்கல்வி பயின்ற அவர், பின்னர் சில தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த தொழில்களில் சஞ்சு சாம்சன் விளம்பரத் தூதராக கூட செயல்படவில்லை. அந்த அளவிற்கு சாருலதா தனக்கான அடையாளத்தை தாமே உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இதனால் இந்த தம்பதியின் காதல் கதையை கேட்டு ரசிகர்கள் பலரும் வியப்படைந்து வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-who-is-sanju-samson-wife-charulatha-ramesh-heartfelt-inter-religious-love-story-from-780455.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
