
International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: வளைகுடா நாட்டில் நிலவிய போர் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்காவும் ஈரானும் வெளியிட்டிருந்தது. இதற்கிடையே போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போஸ்ட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது போஸ்ட்டை நெட்டிசன்கள் பலரும் நக்கலடித்து வருகிறார்கள்.
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஈரான் தரப்பிலும் இரண்டு வாரங்களுக்குத் தாக்குதல் நிறுத்தப்படும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர்
இந்த போர் நிறுத்தம் தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூட தனது ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதில் ஈரான்- அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். லெபனான் உட்பட வளைகுடாவில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வருவதாகவும் ஷெரீப் கூறியிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தில் பதட்டங்கள் தணியும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 10ம் தேதி போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு வளைகுடாவில் நிலவி வரும் நீண்டகால சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போர் நிறுத்தம்
இது தொடர்பாக அவர் மேலும், “இதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஈரான் மற்றும் அமெரிக்கா- அவற்றின் கூட்டணி நாடுகளுடன், லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும் உடனடி போர் நிறுத்தம் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விவேகமான நடவடிக்கையை அன்புடன் வரவேற்று, இரு நாடுகளின் தலைமைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சர்ச்சைகளுக்கும் ஒரு உறுதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்த, ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
குழப்பம்
இருப்பினும், ஷெரீப்பின் இந்த அறிவிப்பிற்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட தகவலுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருந்த போர் நிறுத்த அறிவிப்பில் இரண்டு வாரம் மட்டுமே தாக்குதல் நிறுத்தப்படும் என்பது போல கூறியிருந்தார். ஆனால், ஷெரீப் போரே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது போலப் பதிவிட்டிருந்தார். அதேபோல ஷெரீப் லெபனான் மீதான தாக்குதலும் நிறுத்தப்படும் என்றார். ஆனால், இதை மறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
சர்ச்சை
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் ஷெபாஸ் ஷெரீப்பின் மற்றொரு ட்வீட் சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலிக்குள்ளாகி வருகிறார். ஈரான்- அமெரிக்கா மோதல் குறித்த அவரது ட்விட்டர் பதிவின் edit history தான் இதற்குக் காரணமாக இருக்கிறது. எடிட் செய்வதற்கு முன்பு அவரது போஸ்ட்டில் வரைவு (Draft) என்ற வார்த்தை இருந்ததே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாகும்.
நெட்டிசன்கள்
ஏப்ரல் 7ம் தேதி பகிரப்பட்டிருந்த அந்தப் பதிவில், ஈரான் மோதலில் பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு வாரக் கால அவகாசம் தர டொனால்ட் ட்ரம்பை ஷெரீப் கேட்டிருந்தார். ஆனால், கூர்ந்து கவனித்த பயனர்கள், எடிட் ஹிஸ்டரியில் “Draft – Pakistan’s PM Message on X” என்று இருந்ததைத் தெரிவித்தனர். இதுவே விவாதத்திற்குக் காரணமாகும். இது பாகிஸ்தானின் சொந்த கருத்தாக இருந்தால் ஏன் இப்படி இருக்க வேண்டும்.. அமெரிக்கா சொல்லித் தந்ததையே பாகிஸ்தான் சொல்கிறது. இந்த போஸ்ட் மூலம் நமக்கு இது தெளிவாகிறது என நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இருப்பினும், பொதுவாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சேவ் செய்து வைக்கும்போது இதுபோல பாகிஸ்தான் பிரதமர் கருத்து அல்லது அமெரிக்க பிரதமரின் அறிக்கை என்றே சேவ் செய்து இருப்பார்கள். திருத்தங்கள் எல்லாம் முடிந்து, எல்லாம் ஓகே ஆன பிறகே அதை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-on-middle-east-crisis-shehbaz-sharif-faces-trolls-over-draft-label-in-his-ceasefire-post-788141.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
