
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சாலைகள் முழுக்க தீப்பற்றி எரிந்த சூழலில், “நெருப்பு நதி” முக்கியமான வீதிகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஐந்து எரிபொருள் கிடங்குகள் மீது இஸ்ரேல் திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு
மேலும், இதனால் கிளம்பிய புகை மண்டலத்தால் ஒட்டுமொத்த தெஹ்ரானிலும் இருள் சூழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு டேங்கர் ஓட்டுநர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா/ இஸ்ரேல் போர் விமானங்கள் தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியதில், பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன. அடர்த்தியான கருப்புப் புகை தெஹ்ரான் முழுக்க பரவியதுடன், கராஜ் போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் இது தெளிவாகத் தெரிந்தது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தெஹ்ரானின் இருளை பகலாக மாற்றும் அளவுக்கு தீச்சுவாலைகள் தென்பட்டன. மேலும், அங்கு ஏற்பட்ட வெடிச்சத்தம் நகரின் பல பகுதிகளை உலுக்கின.
🔥BREAKING
After #Israel air strikes in #Iran #IranIsraelWar And #USIranWar turned into river of fire into Iran https://t.co/NQ2zOAJFRS pic.twitter.com/3ZbJvfCYnl— NUNU GLOBAL NEWS (@NUNUCOINnunu) March 8, 2026
நெருப்பு நதி
எண்ணெய் கிடங்குகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், எரிபொருளும் லீக் ஆனது. சாலைகளில் எரிபொருள் பரவிய சூழலில், அதுவும் ஒறு கட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சாலைகளும் தீப்பிடித்து எரிவது போன்ற சூழல் ஏற்பட்டது. மேலும், இந்த “நெருப்பு நதி” முக்கியமான வீதிகளில் பாய்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். ஷாஹ்ரான், அக்தாஸியா மற்றும் ஒரு பெட்ரோலியப் பொருட்கள் போக்குவரத்து மையம் ஆகியவை பாதிக்கப்பட்ட முக்கிய கிடங்குகளில் அடங்கும். தீயைக் கட்டுப்படுத்த இரவு முழுக்க ஈரான் தீயணைப்பு வீரர்கள் முயன்றனர்.
கெமிக்கல் மழை
இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, நகரத்தின் மீது கறுப்பு மழைநீர் பெய்ததாக CNN செய்தியாளர் ஃப்ரெட்ரிக் ப்ளீட்கென் தெரிவித்தார். அதாவது எரிந்து நாசமான சேமிப்பு மையம் மற்றும் எரிபொருளிலிருந்து வெளியான எண்ணெய் மற்றும் கரியுடன் கலந்த மழை போலப் பொழிந்ததாகக் கூறப்பட்டது. தெஹ்ரானிலும் அதைச் சுற்றியும் ஐந்து எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
CRAZY FOOTAGE 🔴
Apocalyptic scenes coming out of Tehran right now pic.twitter.com/VVejLZfaVq
— Open Source Intel (@Osint613) March 7, 2026
தீவிர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்போது சேதங்கள் மதிப்பிடப்பட எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தீ முழுமையாக அணைந்த பிறகும் கூட எரிந்த எரிபொருளின் வாசனை காற்றில் நீடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இஸ்ரேல் தங்கள் எண்ணெய் கிடங்குகளைத் தாக்கியது உண்மை தான் என ஈரான் சொன்னாலும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றே அந்த அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், தாக்குதல் வீடியோவை பார்க்கும் போது சேதம் மோசமாகவே இருந்தது போலத் தெரிகிறது.
இஸ்ரேலும் இந்த தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ராணுவம் இந்த எரிபொருள் கிடங்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், விமானப்படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/apocalyptic-inferno-in-tehran-massive-fires-after-israel-strikes-on-iran-oil-depots-attack-779671.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
