
International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் சமீபத்தில் கொல்கத்தாவைத் தாக்குவோம் எனத் தேவையில்லாமல் வாயை விட்டிருந்தார். இதற்கிடையே அங்கு அமைச்சர்களுக்குச் சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். பெட்ரோல் விலை ஏற்றத்தைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கையாக இதை அந்நாட்டு அரசு எடுத்திருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வளைகுடாவில் வெடித்துள்ள மோதல் சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டிவிட்டது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தான்
இந்தியாவில் வரியைக் குறைப்பது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல், டீசல் விலை பெரியளவில் உயராமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது. ஆனால், பாகிஸ்தானில் அந்நாட்டு அரசால் அதுபோல எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் நிதிநிலை மோசமாக உள்ள சூழலில், இது பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் உயர்ந்துவரும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் அதிருப்தியைத் தணிக்கும் முயற்சியாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 80 பாகிஸ்தான் ரூபாய் (PKR) வரை குறைப்பதாக அறிவித்த ஷெரீப் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குச் சம்பளம் தரப்படாது என்றும் குறிப்பிட்டார்.
விண்ணை முட்டும் விலை
முன்னதாக கடந்த ஏப்ரல் 2ம் தேதி வியாழக்கிழமை, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை முறையே 43% மற்றும் 55% உயர்த்தியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 321.17 பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 458.41ஆக உயர்ந்தது. அதேபோல, டீசல் விலை 335.86 பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 520.35 ஆக அதிகரித்தது.
பாகிஸ்தான் பிரதமர்
பெட்ரோல் மீதான வர்த்தக வரி லிட்டருக்கு 105 பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 160ஆக அதிகரிக்கப்பட்டது. டீசல் மீதான வரியும் உயர்த்தப்பட்ட நிலையில், பிறகு மக்கள் கோபத்தால் அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இது பெட்ரோல் மீதான வரியையும் ரத்து செய்து விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தச் சூழலில் தான் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த முக்கிய அறிவிப்பை ஷெரீப் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும், “பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 80 பாகிஸ்தான் ரூபாயில் இருந்து உடனடியாக குறைக்கிறேன். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் நுகர்வோருக்கு 378 பாகிஸ்தான் ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு பெட்ரோல் விலை மாறாமல் இருக்கும்.
சம்பளம் கட்
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம். கவனமான சேமிப்பு மற்றும் வளங்களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், பணவீக்கம் என்ற புயலிலிருந்து உங்களைப் பாதுகாக்க முயல்கிறோம். கடந்த மூன்று வாரங்களாக, தினசரி எண்ணெய் விலை உயர்வைப் பொதுமக்களுக்குக் கடத்துவது சரியாக இருக்காது என்று கருதினேன். சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நான் முழுமையாக அறிவேன்
சிக்கன நடவடிக்கையாக, அமைச்சர்கள் முதலில் இரண்டு மாதங்களுக்குச் சம்பளம் பெறமாட்டார்கள் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அது இப்போது ஆறு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவொரு அமைச்சரும் சம்பளம் பெற மாட்டார்.” என்றார்.
மானியங்கள்
மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு மானியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. டூவீலர் பயன்படுத்துபவர்களுக்கு லிட்டருக்கு 100 பாகிஸ்தான் ரூபாய் மானியமும், சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு 70,000 முதல் 80,000 பாகிஸ்தான் ரூபாய் வரையிலான நிதி உதவியும், பயணிகள் வாகனங்களுக்கு 1,00,000 பாகிஸ்தான் ரூபாய் மானியங்களும் ஒதுக்கப்படுகிறது..
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-struggle-shehbaz-sharif-govt-cuts-all-ministers-salaries-as-petrol-prices-hit-pkr-500-787579.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
