
India
oi-Vishnupriya R
போபால்: மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில், 60 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். ஆனால், அவரது உடல் மீட்கப்பட்டபோது கைகளும், வாயும் கட்டப்பட்டிருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமோ மாவட்டத்தின் சஹ்ரி கிராமத்தில் வசித்து வந்தவர் ஹல்லி பாய் (60). இவரது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஹல்லி பாய் தனது மகன் சந்தோஷுடன் வசித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, இவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து சந்தோஷ் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீட்டின் கூரை இடிந்து விழுந்து, மூதாட்டி ஹல்லி பாய் உள்ளேயே சிக்கிக் கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றியபோது, மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. அப்போது அவரது கைகளும் வாயும் கயிறால் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் இப்படிக் கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்தபோது வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: “சந்தோஷ் போதைக்கு அடிமையானவர், வேலைக்கும் செல்வதில்லை. வீட்டில் தீப்பிடித்தபோது அவர் மட்டும் காயமின்றி தப்பி வெளியே வந்துவிட்டார். ஆனால், தன் தாயைக் காப்பாற்ற அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை.”
மூதாட்டி தீயில் கருகி இறப்பதற்கு முன்பே கொல்லப்பட்டாரா? அல்லது கொலை செய்துவிட்டு விபத்து போல காட்ட வீட்டை யாராவது தீயிட்டுக் கொளுத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் மகன் சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/elderly-woman-found-dead-with-hands-and-mouth-tied-in-madhya-pradesh-fire-murder-suspected-787469.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
