
International
-Vigneshkumar
டோக்கியோ: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், நிலைமையை சமாளிக்க ஜப்பான் தனது கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கச்சா எண்ணெய் கையிருப்பை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த முதல் ஜி7 நாடு ஜப்பானாகும்.!
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கும் இதே பாதிப்பு தான். இதற்கிடையே ஜப்பான் மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது தனது எண்ணெய் கையிருப்பின் ஒரு பகுதியை மார்ச் 16ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சனே டக்காய்ச்சி அறிவித்தார்.

துணிச்சலான முடிவு
உலகெங்கும் உள்ள நாடுகள் எரிபொருள் சப்ளை மற்றும் கேஸ் சப்ளையை சீராக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், ஜப்பான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டக்காய்ச்சி, “15 நாட்கள் தனியார் துறை எண்ணெய் கையிருப்பு மற்றும் ஒரு மாத அரசுக்குச் சொந்தமான எண்ணெய் கையிருப்பைத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் சர்வதேச விநியோக சங்கிலி பாதிப்புகளைத் தணிக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்
எரிசக்தி சந்தை
ஈரான் மோதல் காரணமாக அதிகரித்து வரும் பதட்டங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கி வருகின்றன. மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சங்கள் எழுந்திருக்கும் நிலையில், விலைகளைக் கட்டுப்படுத்தவும், பற்றாக்குறையைத் தடுக்கவும் உலக நாடுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே உலகின் முக்கிய கச்சா எண்ணெய் நுகர்வு நாடுகள் இடையே நடந்த விவாதங்களுக்குப் பிறகு ஜப்பான் இந்த முடிவை எடுத்துள்ளது.
போர் இல்லாத சூழல்களில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை வழக்கமாக இருக்கும். ஆனால், இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் உலக நாடுகள் எப்போதும் குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய்யைக் கையிருப்பில் வைத்துக் கொள்ளும். புவிசார் அரசியல் பிரச்சனைகள், இயற்கை சீற்றங்கள் காரணமாக உற்பத்தி அல்லது விநியோக சங்கிலி பாதிக்கப்படும்போது, இதுபோன்ற கையிருப்பை ரிலீஸ் செய்து உலக நாடுகள் நிலைமையை சமாளிக்கும்.
ஜப்பான் சிக்கல்
இந்தியாவைப் போலவே கச்சா எண்ணெய்யில் முழுக்க முழுக்க இறக்குமதியைத் தான் ஜப்பான் சார்ந்து இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் ஏற்படும் எந்தவொரு சிறு மாற்றங்களும் கூட ஜப்பானில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே கையிருப்பை ரிலீஸ் செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இது சந்தையில் கூடுதல் கச்சா எண்ணெய்யைக் கொண்டு வரும். இதனால் சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டாலும் விலை தடாலடியாக உயராமல் அதை நிலைப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் ஜப்பான் எந்த கால இடைவெளியில் இந்த கையிருப்பை மார்கெட்டிற்குள் கொண்டு வரும்… எத்தனை லிட்டரை கொண்டு வரும் என்பது குறித்த தகவல்கள் இப்போது இல்லை. அந்த தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/japan-releases-oil-reserves-first-among-g7-amid-middle-east-crisis-and-surging-crude-oil-prices-011-780521.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
