
Tamilnadu
oi-Hema Vandhana
தென்காசி: திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளில் பிஸியாக இருந்தாலும், அடிமட்ட தொண்டர்கள் இப்போதே ஊர் சுவர்களை ஆக்கிரமித்து சின்னங்களை வரைய தொடங்கிவிட்டார்களாம்.. குறிப்பாக டிஜிட்டல் யுகத்திலும் ஆட்டோ விளம்பரங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத மவுசு, அரசியல் கட்சிகளிடையே ரிசர்வேஷன் போட்டியையே ஏற்படுத்தி உள்ளதாம்..!!
தமிழகத்தில் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதிலும், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அடிமட்ட அளவிலான தேர்தல் பிரசார பணிகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன..

குறிப்பாக, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்தில் குதித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
அதிமுக கூட்டணியில் இன்னும் சில இழுபறிகள் நீடித்தாலும், அக்கட்சியின் தொண்டர்கள் களப்பணியில் சற்றும் சளைக்காமல் ஈடுபட்டு வருகின்றனர்.. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன..
சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் மிகுந்த இந்த டிஜிட்டல் யுகத்திலும், பாரம்பரியமான சுவர் விளம்பரங்களுக்கு இருக்கும் மவுசு கொஞ்சமும் குறையவில்லையாம்.. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமப்புற சுவர்கள் அனைத்தும் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்களால் இப்போதே பளிச்சிட துவங்கிவிட்டன..
சுவர் விளம்பரங்களுக்கு போட்டி
பல இடங்களில் வீடுகளின் சுவர்களில் இப்போதே திமுக, அதிமுக என்றெல்லாம் எழுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம்.. பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் இந்த சுவர் விளம்பரப் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பாலங்களின் தடுப்பு சுவர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என ஒரு இடம் விடாமல், எங்கு பார்த்தாலும் தேர்தல் வாசகங்கள் மின்னுகின்றன..
என்னதான் ஐடி விங்கினரின் டிஜிட்டல் பிரச்சாரம் ஸ்மார்ட் போன்களில் ஆக்கிரமித்தாலும், தரைமட்ட பிரச்சாரமாக இந்த சுவர் விளம்பரங்களின் மவுசு இன்னமும் குறையாமல் உள்ளது.. சுவர்களில் கட்சிகளின் ஓவியங்களும் வாக்காளர்களை ஈர்த்து வருகின்றன..
இந்த தேர்தல் பிரச்சார போட்டியில், மொபைல் ஆட்டோ விளம்பரங்களுக்கும் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.,
மதுரை சந்துபொந்தெல்லாம் ஆட்டோ
குறிப்பாக மதுரை போன்ற மாநகரங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வலம் வரும் நிலையில், அவற்றின் பின்புறம் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன.. சுவர் விளம்பரங்களை விட ஆட்டோ விளம்பரங்கள் தொகுதியின் சந்து பொந்துகளுக்கெல்லாம் சென்று சேரும் என்பதால், இதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது..
இதற்காக இப்போதே ஆட்டோ உரிமையாளர்களிடம் அரசியல் கட்சிகள் புக்கிங் செய்துவிட்டார்களாம்.. சில ஆட்டோக்கள் குறிப்பிட்ட கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களில் இருப்பதால், அவை ஏற்கனவே அந்தந்த கட்சிகளுக்காக உறுதி செய்யப்பட்டுவிட்டன..
தேதி அறிவிப்பு அல்லது வேட்பாளர் லிஸ்ட் இன்னும் முழுமையாக வராத நிலையிலும் கூட, முதற்கட்டமாக கட்சியின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பிளக்ஸ் பேனர்களாக ஆட்டோக்களில் கட்டும் பணி தொடங்கியுள்ளது.. பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்களின் பெயர் மற்றும் சின்னம் தாங்கிய விளம்பரங்களாக இவை மாற்றப்பட உள்ளன.
ஆட்டோ பிரச்சாரங்கள்
திமுக மகளிர் அணியினர் ஒருபுறம் அரசு திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்ய, மறுபுறம் அதிமுகவினர் துண்டுப் பிரசுரங்கள் மூலம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்..
இப்போது புதிதாக களமிறங்க போகும் தவெகவினர், தங்கள் விசிலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தீவிரமாக உழைக்க துவங்கி உள்ளார்கள்., ஆக மொத்தம் சுவர் விளம்பரங்கள் மற்றும் ஆட்டோ பிரச்சாரங்கள் மூலம் தமிழக தேர்தல் களம், திருவிழா போல களை கட்ட துவங்கி விட்டது..!!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/super-reservation-parties-in-tenkasi-and-silent-wall-wars-autos-roaring-in-every-corner-due-to-tami-780389.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
