
International
oi-Velmurugan P
வெலிங்டன்: நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது இந்திய பெண் வந்தனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து நிறுவனங்கள் பெரும்பாலும் புதியவர்களை விட, நியூசிலாந்திலேயே பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். இங்கே வேலை கிடைப்பது என்பது முடியாத காரியம் அல்ல, ஆனால் அதற்கு அதீத பொறுமையும், விடாமுயற்சியும் தேவை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்
இந்தியர்களில் பலர் அமெரிக்காவில் போனால் செட்டில் ஆகிவிடாலாம்.. இங்கிலாந்து போனால் செட்டில் ஆகிவிடலாம்.. கனடா போனால் சூப்பராக வாழலாம்.. ஆஸ்திரேலியா போனால் அருமையாக வாழலாம். நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் வேலை கிடைத்தால், அது வாழ்நாள் வரம் என்று எல்லாம் பேசி கேள்விப்பட்டிருப்போம்..

நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிக்கு புலம்பெயர்ந்த பின்னர், வேலை தேடுவதில் தான் எதிர்கொண்ட சிரமங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது வெளிப்படையான சமூக ஊடகப் பதிவு, வேலை சந்தையில் புதிதாக வருபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டியிருக்கிறது. வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்து பலரும் ஆதங்கத்தை கொட்டுவதற்கு வந்தனாவின் பதிவு தற்போது காரணமாகி உள்ளது.
ஏனெனில் ஒரு புதிய நாட்டில் வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்பட்டு செல்லும் இந்தியரகள் பெரும்பாலும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் போகிறார்கள். குறிப்பாக நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு யதார்த்தம் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.. பல புலம்பெயர்ந்தவர்களுக்கு, அந்த முதல் வேலையைப் பெறுவதே மிகவும் கடினமான தடையாக உள்ளது. குறிப்பாக உள்ளூர் அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சந்தைகளாக பல்வேறு நாடுகள் மாறி உள்ளதால், நிலைமை மிகவும் கடினமாகி உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த இந்திய பெண் வந்தனா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு காணொளியில் நியூசிலாந்தில் வேலை சூழ்நிலையை வெளிப்படையாக விளக்கினார்.
நியூசிலாந்து வேலைவாய்ப்பு பற்றி இந்திய பெண் வந்தான கூறுகையில், “நான் அமெரிக்காவிலிருந்து இங்கே குடிபெயர்ந்தது முதல், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலுள்ள எனது நண்பர்கள் பலரும் இங்கிருக்கும் வேலைவாய்ப்புச் சந்தை பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், தற்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. வேலைகள் இங்கே மிகக் குறைவாகவே உள்ளன. அதுமட்டுமில்லாமல், நிறுவனங்கள் பெரும்பாலும் புதியவர்களை விட, நியூசிலாந்திலேயே பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். இங்கே வேலை கிடைப்பது என்பது முடியாத காரியம் அல்ல, ஆனால் அதற்கு அதீத பொறுமையும், விடாமுயற்சியும் தேவை.
“வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களும் அழகான படத்தைப் போல அமைந்துவிடுவதில்லை. இப்போது எனக்குத் தேவைப்படுவது எல்லாம் பொறுமை, தொடர்ச்சியான முயற்சி, அப்புறம் சூழல் சாதகமாக இல்லாத போதும் என் மீது நான் வைக்கும் நம்பிக்கைதான்.
ஒரு புதிய நாட்டில் வேலை தேடுவது என்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஆனால், இந்த இக்கட்டான காலகட்டம் என்னை இன்னும் வலிமையானவளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக நல்ல நாட்கள் வரும்!” இவ்வாறு வந்தனா கூறியுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், “நான் 5000 இடங்களுக்கு விண்ணப்பித்தேன், கடைசியாக ஒன்றில்தான் வேலை கிடைத்தது” என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், “கடந்த 5 மாதங்களில் 110-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியும் பலனில்லை, நிலைமை மிக மோசம்” என்று குமுறலை வெளிப்படுத்தி உள்ளார. அதேசமயம், “நியூசிலாந்தில் ஒரு வேலை இருந்தால், ஆஸ்திரேலியாவில் 10, லண்டனில் 100, அமெரிக்காவில் 1000 வேலைகள் உள்ளன” என இன்றும் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/new-zealand-jobs-an-indian-woman-reveals-the-unvarnished-reality-a-lesson-for-youth-787555.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
