
International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே 2 வாரம் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் வான்வெளி பரப்பில் நவீன ரக ட்ரோனை பறக்கவிட்டதாகவும், அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த போர் நிறுத்த மீறல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வந்தது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.
இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டது.
டிரம்ப் மிரட்டல்
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. காலக்கெடு முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு டிரம்ப், ”ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரானின் நாகரீகம் அழிக்கப்படும். அதில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியாது” என்று மிரட்டினார். இதனால் பதற்றம் அதிகரித்தது.
போர் நிறுத்தம் – ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு
இதற்கிடையே தான் பாகிஸ்தான் தலையீட்டு ஈரான் – அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து போர் 2 வாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என கூறப்பட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறந்தது. கப்பல்கள் வழக்கம்போல் பயணிக்க தொடங்கின. இதனால் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்
அதோடு இந்த போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகளும் வரவேற்றன. இது குட்நியூஸாக பார்க்கப்பட்டது. ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் தற்போது ஈரான் பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை மீறி உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை. அனைத்து கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் என்ன செய்தது?
இதுதொடர்பாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”சில நிமிடங்களுக்கு முன் ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் லார் நகரின் வான்வெளி பரப்பில் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் 900 ரக ட்ரோன் பறந்தது. இந்த ட்ரோன் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நவீன வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
ராணுவ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விமானமும், ட்ரோன்களும் ஈரான் வான்வெளிக்குள் நுழைவது என்பது போர் நிறுத்த மீறலாக கருதப்படும். இதற்கு உறுதியான முறையில் பதிலடி கொடுக்கப்படும். தற்போது இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-announces-that-oil-tankers-passing-strait-of-hormuz-stopped-after-israel-breach-ceasfire-788243.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
