
Business
oi-Vigneshkumar
சென்னை: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. மத்திய கிழக்கில் வெடித்துள்ள இந்த போர் தமிழகத்தில் இருக்கும் சாதாரண விவசாயியும் கூட பாதிப்பதாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா- இஸ்ரேல் மற்றொரு பக்கம் ஈரான் என மாறி மாறி தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் தான் உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு தளங்களில் ஒன்றான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கு மோதல்
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் தனது அண்டை நாடுகளான சவுதி மற்றும் கத்தாரில் இருக்கும் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. இது சர்வதேச அளவில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டு, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த மோதல் மத்திய கிழக்கைத் தாண்டி உலகளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஈரானின் புரட்சிகர காவல்படை ஹார்முஸ் ஜலச்சந்தியை மூடியுள்ளது. இந்தியா கப்பல்களுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும் கூட முழுமையாக அங்குக் கப்பல் போக்குவரத்து சீராகவில்லை. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 5ல் ஒரு பங்கு இதன் வழியாகவே நடக்கிறது. அதேபோல எல்பிஜி போக்குவரத்திலும் 20-25% இதன் வழியாகவே நடக்கிறது. இதனால் தெற்காசிய நாடுகள், குறிப்பாக இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
ஏற்கனவே இதன் வலியை லேசாக இந்தியா உணர ஆரம்பித்துவிட்டது. கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி நமது நாட்டிற்கு வருவது கடுமையாகச் சரிந்துள்ளது. உள்நாட்டில் இதுவரை பெட்ரோல் டீசலுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கூட எல்பிஜி சப்ளை சிக்கலில் இருக்கிறது. மத்திய அரசு இப்போது வணிக பயன்பாட்டைக் காட்டிலும் வீட்டுப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து கேஸ் சப்ளை செய்து வருகிறது. இதனால் உணவகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்படத் தமிழகம் முழுக்க உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
விவசாயி பாதிப்பு
உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் அது சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் வேலை செய்வோர், டெலிவரி ஏஜெண்டுகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டிலும் இது எதிரொலிக்கிறது. ஹோட்டல்கள் மூடப்பட்டு அல்லது குறைந்த அளவே இயங்குவதால் காய்கறி தேவையைக் குறைத்தன. இதனால் கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் வழக்கமாக விற்பனையாவதைக் காட்டிலும் 2,000 டன் வரை காய்கறிகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது வணிகர்கள் மற்றும் விவசாயிகளையும் கூட பாதிக்கிறது.
ஆனால், இது இத்தோடு நிற்காது. சமீபத்திய எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டிவிட்டது. இது மேலும் உயரும்.. போர் தொடர்ந்தால் $200ஐ கூட தொடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் பாதிப்பு ஏற்படலாம் எனக் கருத்தில் கொண்டு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்டாம்பூச்சி நிகழ்வு
இந்தியாவில் அந்தளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றாலும் இதே நிலை தொடர்ந்தால் என்ன வேண்டும் என்றாலும் ஆகலாம் என அஞ்சப்படுகிறது. அப்படி இந்தியாவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உயரும்.. மேலும் விலைவாசியும் கூட உயரும். இது அனைத்து தரப்பையும் நேரடியாகவே பாதிக்கும். இப்படி தான் எங்கோ ஈரானில் வீசப்படும் குண்டுகளும், அதற்குத் தரப்படும் பதிலடிகளும் கிராமத்தில் சாதாரண விவசாயி கூட பாதிக்கும் பட்டாம்பூச்சி நிகழ்வாக மாறுகிறது.!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/how-middle-east-tension-affecting-tamil-nadu-farmers-know-about-the-surprise-butterfly-effect-782793.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


