
International
-Halley Karthik
தெஹ்ரான்: வளைகுடாவில் ஈரானும் கத்தாரும் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான தென் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கப் போவதாகச் சபதம் ஏற்றிருக்கிறது. மறுபுறம் கத்தார், இஸ்ரேலின் செயலை ஆபத்தான, பொறுப்பற்ற செயல் எனக் கண்டித்துள்ளது.
இத்தாக்குதல், அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கிய பின்னர் வளைகுடாவில் ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் முதல் தாக்குதலாகும். இத்தாக்குதலுக்குப் பின், அண்டை நாடுகள் தங்கள் எரிசக்தி மையங்களை விட்டு விலகி இருக்குமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தாக்குதல்
இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், தென் பார்ஸ் எரிவாயு வயலில் உள்ள ஈரானின் பெட்ரோ கெமிக்கல் வளாகம் வான்வழித் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இஸ்ரேலியத் தாக்குதலில் தென் பார்ஸ் எரிவாயு தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலையின் பகுதிகள் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.
ஈரானின் எச்சரிக்கை
தாக்குதலுக்குப் பிறகு, எரிவாயு வயலிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு, தீயை அணைக்க அவசரக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிகழ்வுகள் வளைகுடாப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
இப்படி இருக்கையில், இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் எடுத்திருக்கிறது. வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்களிலிருந்து உடனடியாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
5 எரிசக்தி நிலையங்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-ஹோஸ்ன் எரிவாயு வயல்
- கத்தாரின் ராஸ் லாஃபான் சுத்திகரிப்பு ஆலை
- சவுதி அரேபியாவின் அல்-ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம்
- மசையீத் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் சாம்ரெஃப் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை இவற்றில் அடங்கும்.
கத்தார் கண்டனம்
தென் பார்ஸ் மீதான தாக்குதலுக்காக கத்தார் இஸ்ரேலைக் கடுமையாக சாடியுள்ளது. கத்தாரின் வெளியுறவு அமைச்சகம், உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைத் தாக்குவது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல் என கண்டனம் தெரிவித்திருக்கிறது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி, முக்கியமான வசதிகளை குறிவைப்பதைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இஸ்ரேல், தென் பார்ஸ் எரிவாயு வயலைத் தாக்கியதை உறுதிப்படுத்திய செய்திகளை அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $108.60 ஐ எட்டியது, இது முந்தைய செவ்வாய்க்கிழமை விலையை விட 5% அதிகம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-vows-severe-retaliation-as-israel-strikes-world-s-largest-natural-gas-field-south-pars-011-782491.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
