
International
oi-Prasanna Venkatesh
தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக ‘முழு நாகரிகமே இன்றிரவு அழியும்’ என்று விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஈரான் அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும், தொடர்புகளையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஈரான் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலுக்குப் பிறகு அனைத்து அரசு தரப்பிலான நேரடி பேச்சுவார்த்தை சேனல்களும் மற்றும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் முடக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து ஈரானை சரணடையச் செய்ய முயற்சிப்பதாலும், ஈரான் மக்களை அழிப்பதாக விடுத்த எச்சரிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது. இதனாள் இனி எந்த வகையான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று ஈரான் உறுதியாகக் கூறியுள்ளது என டிவிட்டரில் தி கோபைஸ்ஸி லெட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் இந்த நடவடிக்கையை அவர்களின் எதிர்ப்பை காட்டும் விஷயம் என்று விளக்கியுள்ளனர். டிரம்ப் விதித்த இரவு 8 மணி கெடு நெருங்கும் நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தப் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதித்துள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 117 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போதைய விலை நிலவரம் இன்னும் ஏழு வாரங்கள் தொடர்ந்தால், அமெரிக்காவின் நுகர்வோர் விலைப் பணவீக்கம் (CPI) 3.7 சதவீதம் வரை உயரும் என்று பொருளாதார கணக்கீட்டு மாடலர்களை கணித்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதால், உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதியை சார்ந்துள்ள நாடுகள் கவனமாகக் கண்காணித்து வருகின்றன.
இரு தரப்பும் முரண்
ஈரான், அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதேநேரம், டிரம்பின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியுள்ளது.
இது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை மட்டுமின்றி, உலக அளவிலான எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதார நிலையையும் பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-cuts-off-all-diplomatic-channels-with-us-after-trump-s-entire-civilization-will-die-tonight-t-787959.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
