
Business
oi-Prasanna Venkatesh
மும்பை:இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதும் மவுசு அதிகம் என்பதால் ஒரு சிறு விலை வித்தியாசம் கூட பெரும் லாபத்தை கொடுக்கும் வர்த்தகமாக மாறி விடுகிறது. இதனாலேயே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு தங்க கடத்தலை குறைப்பதற்காகவே தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைவாக வைத்துள்ளது. ஆயினும் தற்போது டாலர் மதிப்பு, தங்கம் விலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக முறைகேடான வகையில் இந்தியாவுக்கு தங்கம் வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வருவாய் உளவுத்துறை (Directorate of Revenue Intelligence – DRI) நடத்திய ஆப்ரேஷன் தஹபு பிளிட்ஸ் எனும் சிறப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய தங்கம் கடத்தல் கும்பலை பிடித்துள்ளது.

மும்பை
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் 8 அன்று நைரோபியில் இருந்து வந்த 24 வெளிநாட்டுப் பெண்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து சுமார் 25.10 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 4.27 கிலோ தங்க நகைகள் உட்பட மொத்தம் 29.37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.37.74 கோடியாகும்.
நைரோபி ‘கேரியர்கள்’
DRI அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செயல்பட்டு இந்த கும்பலை பிடித்துள்ளனர். நைரோபியில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த இந்தப் பெண்கள் ‘கேரியர்கள்’ (carriers) என்று அழைக்கப்படும் தங்கம் கடத்தும் நபர்களாக இருந்தனர்.
இவர்களுக்கு தங்கம் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும், விமான நிலையில் எப்படி இயங்க வேண்டும் என்பதை பயிற்றுவிக்கப்பட்டு, தங்கத்தை உடலில் மறைத்து வைத்து, விமான நிலைய சோதனைகளைத் தவிர்க்கும் வகையில் பயணம் செய்துள்ளனர்.
விமான துறை சுங்க அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்த காரணத்தால் சரியாக திட்டமிட்டு மொத்தமாக பிடித்தனர்.

பெண்களுக்கு தீவிர பயிற்சி
இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாதாரண பயணிகளைப் போல் தோன்றும்படி பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். இதேநேரத்தில் தங்கத்தை எப்படி மறைத்து வைப்பது, விமான நிலைய சோதனைகளை எப்படி தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு உத்திகளை பயிற்றுவிக்கப்பட்டு, அதை பாலோ செய்துள்ளதையும் சுங்க அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இது ஒரு சாதாரண கடத்தல் அல்ல, மிகவும் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நெட்வொர்க் என்று DRI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழு தங்கம் கடத்தலை எந்தளவுக்கு ப்ரொபஷனலாக செய்து வந்துள்ளனர் என்பதை கண்டு DRI அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த 24 பெண்களும் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியபுள்ளி
தற்போது இந்த 24 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ஆனால் இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய தலைகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. DRI அதிகாரிகள் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/massive-gold-smuggling-syndicate-at-mumbai-airport-dri-busts-24-women-nabbed-with-29-37-kg-gold-wor-788787.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
