
International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமெரிக்கா தற்போது தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு காரணம் பாகிஸ்தான் கிடையாது என்றும் முழுக்க முழுக்க சீனாதான் பங்காற்றியது எனவும், பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஹமீத் மிர் கூறியிருக்கிறார்.
“அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் சீனா முக்கியப் பங்காற்றியது. கடைசி நேரத்தில் தலையிட்டு, ஈரானை ஒப்புக்கொள்ளச் செய்தது” என மூத்த பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஹமீத் மிர் கூறியுள்ளார்.

ஈரானின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாகச் செயல்பட்ட சீனாவின் இந்தத் தலையீடு, பாகிஸ்தானின் பல வாரகால இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு நடந்து. அதேநேரம் இந்த போர் நிறுத்தம் ஒரு பெரிய பதற்றத்தை தணித்திருக்கிறது. இந்தியா டுடேயின் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஹமீத் மிர் இந்த விஷயத்தை கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, “ஒரு மத்தியஸ்தர் எனில், அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானுக்கு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு இல்லை. எனவே, பாகிஸ்தானால் முழுமையான மத்தியஸ்தராக செயல்பட முடியாது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பினருடன் மட்டுமே உறவு இருந்தது.
ஆரம்பத்தில், ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தியது. ஏனெனில், சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, “தயவுசெய்து சவுதி அரேபியாவைத் தாக்காதீர்கள். நீங்கள் விரும்பாத முடிவுகளை நாங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்காதீர்கள்” என்று பாகிஸ்தான் ஈரானிடம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் இரு தரப்பினரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்க்சியையும், அமெரிக்க நிர்வாகத்தையும், சவுதி மற்றும் வளைகுடா தலைவர்களிடமும் பேசினார். இந்த பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கும்போதே, இடையில் துருக்கியும் சேர்ந்துக்கொண்டது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பான முழு முயற்சியையும் நாங்கள் மட்டுமே எடுக்கவில்லை. பாகிஸ்தானின் ஈடுபாடு முறையான பேச்சுவார்த்தையாளராக இல்லாமல், பாலமாகச் செயல்படுவதாக இருந்தது. அமெரிக்கா-ஈரான் இடையே தகவல்களை எளிதாக்கும் ஒரு சமாதான முயற்சியை நாங்கள் செய்தோம். மற்றபடி, ஈரானை ஒப்புக்கொள்ள வைத்தது சீனாதான்” என்று கூறியிருக்கிறார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-was-facilitator-not-mediator-in-us-iran-truce-hamid-mir-788531.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
