
International
oi-Hema Vandhana
தெஹ்ரான்: உலகத்தையே உலுக்கிய அந்த எரிவாயு களம் மீதான திடீர் தாக்குதல், வெறும் போர்ச் செய்தியாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரத்தையே அச்சுறுத்தும் ஒரு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.. இதன் பின்னணியில் உள்ள மர்மமான தாக்குதல்களும், வல்லரசு நாடுகளின் மோதல்களும் உலக நாடுகளை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளன.. இப்படியிருக்கும் சூழலில், உங்களது அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கும் எரிபொருள் விலை முதல் அத்தியாவசியத் தேவைகள் வரை அனைத்தையும் முடக்கும் அபாயம் உள்ளதால், இந்த சம்பவம் குறித்த பயம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..
மத்திய கிழக்கு பகுதியில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்றமானது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.. உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “சவுத் பார்ஸ்” பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேசத் தகவல்கள் வெளியாகியுள்ளன..

இந்தத் தாக்குதலானது ஏதோ தற்செயலாக நடந்த ஒரு சாதாரண சம்பவம் அல்ல என்று பலரும் சொல்கிறார்கள்.. இதன் பின்னணியில் பெரிய அளவிலான அரசியல் மற்றும் இராணுவ மோதல்கள் மறைந்திருக்கலாம் என்பதே பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் ஆகும்.
எரிசக்தி ஆதாரம்
இந்த எரிவாயு வயலானது உலகின் பல நாடுகளுக்கு மிக முக்கியமான எரிசக்தி ஆதாரமாகத் திகழ்கிறது.. இந்த ஒரு இடத்தில் ஏற்பட்ட பாதிப்பானது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது..
இதனால் இந்த சம்பவமானது உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. இந்தத் தாக்குதலுக்கு பிறகு, ஈரான் நாடு கடும் பதிலடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.. “இந்தத் தாக்குதலுக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க முடியாது.. அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது..
இந்த எச்சரிக்கையானது உலக நாடுகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.. மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடையும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது..
எரிசக்தி போரின் தொடக்கம்
இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. சில சர்வதேச வல்லுநர்கள் சொல்வது என்னவென்றால், இது ஒரு எரிசக்திப் போரின் தொடக்கமாக இருக்கலாம். நேரடி ஆயுதப் போரை தாண்டி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதை மட்டுமே குறிவைக்கும் புதிய யுத்த உத்தியாக இது பார்க்கப்படுகிறது..
இந்தத் தாக்குதலின் உடனடி விளைவாக உலகளவில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இது பொதுமக்களின் தினசரி வாழ்க்கைச் செலவுகளை அதிரடியாக அதிகரிக்கக்கூடிய ஆபத்தாக மாறும்..
ஹார்முஸ் ஜலசந்தி
மேலும், உலகின் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.. உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் கப்பல்களில் பெரும்பாலானவை இந்த வழியாகத்தான் பயணம் செய்கின்றன..
இந்த பாதையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், கப்பல்கள் வேறு நீண்ட தூரப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.. இதனால் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாமதமும், தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது..
இந்த சூழலில் இந்தியாவுக்கும் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.. இந்தியா தனது தேவையில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.. குறிப்பாக ரஷியாவிடமிருந்து கிடைக்கும் எண்ணெயை இந்தியா பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியானது இந்தியச் சந்தையையும் பெருமளவு பாதிக்கலாம்..
தங்கத்தை நோக்கி ஓட்டம்
இதனிடையே, தங்கம் விலையும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடித் தங்கம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.. ஷேர் மார்க்கெட்டிலும் ஒருவிதமான பயமும் பதற்றமும் நிலவி கொண்டிருக்கிறது.. இதெல்லாம் வெறும் ஒரு தாக்குதல் மட்டுமல்ல.. இது உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது..
இப்போதைக்கு உலகம் முழுவதும் ஒரே கேள்விதான் எழுகிறது.. இந்த பதற்றம் இங்கேயே முடிவடையுமா அல்லது இன்னும் பெரிய உலக நெருக்கடியாக உருவெடுக்குமா என்பதே அந்த பெரிய கேள்வியாகும்..!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/russia-s-sudden-oil-shift-how-india-s-hidden-hand-outsmarted-china-amid-qatar-war-782545.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
