
India
oi-Vigneshkumar
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அசாமில் சிட்டிங் எம்.பியும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரத்யுத் போர்டோலாய், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது அங்கு பாஜகவுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டை தரும் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுடன் அசாமிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அங்கு பாஜக ஆட்சியை நடந்து வருகிறது. 2021 முதல் ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வராக இருக்கிறார். இந்தச் சூழலில் தான் அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக களமிறங்கும் சூழலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்குகிறது.

காங்கிரஸுக்கு அதிர்ச்சி
ஆனால், இப்போது வரை அசாமில் நடக்கும் சம்பவங்கள் காங்கிரஸுக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. அசாமில் சிட்டிங் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகியிருந்தார். அவர் இன்று பாஜகவில் இணைந்தார். இது ஏற்கெனவே சிக்கலில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அடியாகும். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் சைகியா ஆகியோர் முன்னிலையில் போர்டோலாய் பாஜகவில் இணைந்தார். அசாமின் தற்போதைய பாஜக முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா கூட காங்கிரஸில் இருந்து வந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரத்யுத் போர்டோலாய்
காங்கிரஸின் சிட்டிங் எம்பி பிரத்யுத் போர்டோலாய் பாஜகவில் இணைந்துள்ளது மகிழ்ச்சி தருவதாகக் கூறிய ஹிமந்த பிஸ்வா சர்மா, அவரை போன்ற ஒரு மூத்த எம்.பி. பாஜகவில் இணைவது கட்சியை நிச்சயமாக வலுப்படுத்தும் என்றார். அசாமின் முன்னாள் காங்கிரஸ் தலைவரான பூபன் குமார் போரா, பாஜகவில் இணைந்த ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்போது பிரத்யுத் போர்டோலாயும் இணைந்துள்ளார். மூத்த தலைவர்கள் வரிசையாக விட்டுச் செல்வது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இது அசாமில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மொத்தமே காங்கிரஸுக்கு 3 எம்பிக்கள் மட்டுமே இருந்த நிலையில், அதில் ஒருவரைக் காங்கிரஸ் இழந்துள்ளது. அதை விடத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு இது நடந்துள்ளது காங்கிரஸின் இமேஜ்ஜை பாதித்துள்ளது.
காரணம் என்ன
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை போர்டோலாய் அனுப்பினார். அதில் மிகுந்த வருத்தத்துடன், நான் எனது அனைத்துப் பதவிகளையும் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். விலகலுக்கான காரணத்தை அவர் தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை. இருப்பினும், அசாமில் இப்போது கௌரவ் கோகோயை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் சூழலில், இதனால் போர்டோலாய் அதிருப்தி அடைந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது..
உட்கட்சி முரண்பாடுகளே போர்டோலாய் வெளியேறக் காரணம் என்பதைப் பிரியங்கா காந்தியும் சுட்டிக்காட்டினார். சட்டசபைத் தேர்தலில் சீட் வழங்குவதில் ஏற்பட்ட அதிருப்தியால் போர்டோலாய் வெளியேறியதாகப் பிரியங்கா காந்தி வத்ரா கூறினார். மார்கரிட்டாவின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான போர்டோலாய், அசாமில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருந்தார். அவர் பாஜகவில் ஐக்கியமாகி இருப்பது காங்கிரஸுக்கு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.
அசாம் தேர்தல்
அசாமை பொறுத்தவரை அங்கு மொத்தம் 126 சீட்கள் உள்ளன. குறைந்தது 64 இடங்களில் வெல்லும் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களில் வென்று இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அங்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/congress-problem-in-assam-another-senior-leader-pradyut-bordoloi-joins-bjp-over-ticket-row-782351.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
